Quantcast
Channel: Kumurum MALAYAKAM
Viewing all 376 articles
Browse latest View live

கனரக வாகனம் மோதியதில் பாடசாலை சிறுமி பலி- நானுஓயா நகரில் பதற்றம்

0
0
நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா நகரின் பாதசாரிகள் கடவையில் பாதை கடக்க முற்பட்ட. 06 வயது சிறுமி மீது கனரக வாகனம் மோதுண்டதில் சிறுமி ஸ்தலத்திலே பலியானார். ஊயிரிழந்த சிறுமி ரதல்ல கீழ்பிரிவு பகுதியை சேர்ந்த ஆகாஷா தேவ்மினி (06 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

நானுஓயா ரயில் மேம்பாலத்திற்கருகில்  உள்ள  பாதசாரிகள் கடவையில் இன்று காலை 8 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நானுஓயா நகரத்திலிருந்து பொலிஸ் வழியாக நானுஓயா ஜேம்ஸ் பீரிஸ் சிங்கள வித்தியாலயத்திற்கு செல்வதற்கு பாதசாரி கடவையை கடக்க முயன்ற போதே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இச்சிறுமியின் உயிரிழப்பினால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொது மக்கள் கனரக வாகனத்து தீ வைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தினால் நானுஓயா பிரதேசத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து இதனை கட்டுப்படுத்துவதற்காக விசேட அதிரடிப்படையினர், பொலிசார், இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இச்சம்பவத்தையடுத்து நுவரெலியா - ஹட்டன் ஊடான பொது போக்குவரத்து பல மணிநேரம் முற்றாக ஸ்தம்பித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக நானுஓயா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்

நானுஓயா பிரதேசத்தில் இடம்பெற்ற அமைதியின்மை நிலமை தொடர்பான விசாரணைகளை இலகுபடுத்தும் நோக்கில் நானுஓயா பொலிஸ் நிலைய அதிபர் நுவரெலியா பொலிஸ் தலைமையகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார். 


மலையக அரசியல் பிரவேசத்துக்கான இலவச ஓடுபாதை

0
0
இலங்கை நாட்டைப் பொறுத்தவரையில் மலையகத் தமிழர்கள் 200 வருடகால வரலாற்றைக் கொண்டவர்கள். எட்டு பிரதான மாவட்டங்களில் செறிந்து வாழும் மலையக மக்கள், அதே லயன் குடிசைகளிலும் முறையற்ற சுகாதார வசதி, கல்வி வசதி, பொருளாதார பிரச்சினை, வரட்சி, வறுமை, வேலைவாய்ப்புத் திண்டாட்டம், மத்திய கிழக்கு நோக்கிய பெண்கள் பயணம், இளைஞர்களின் நகர்ப்புற மோகம் என்ற பல்வேறு சொல்லொணாத் துயரங்களை நாளுக்கு நாள் அனுபவித்து வருகின்றனர்.

மனிதன் மரணித்து, அவனை அடக்கம் செய்வதற்கான நிலம்கூட இல்லாத சமூகமாகவே, மலையகச் சமூகம் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கின்றது.
மலையகத்தைச் சேர்ந்தவர்கள் யாராவது இறந்தால், தேயிலைத் தோட்ட நிலத்தில் தேயிலைக் கன்றுகளை அகற்றி, 6 அடி ஆழமான குழியை வெட்டுவதற்கு முகாமையாளரிடம் அதற்குரிய அனுமதி பெறப்பட வேண்டும். சாகும் வரைக்கும் வீடு. ஆனால் அதைச் சொந்தம் கொண்டாட முடியாது. இவ்வாறு   சொல்ல முடியாத வேதனைகள் தொடர்கின்றன. 
தோட்டத் தொழிலாளர்கள் பச்சைக்குத்தப்பட்ட  சமூகம். இன்று நாட்டுக்கு அதிக வருமானத்தை ஈட்டித் தரும் தேயிலை, இறப்பர் தோட்டங்களில் வேலை செய்து, தமது குடும்பம், வாழ்க்கையை நகர்த்திச் செல்கின்றனர்.
சம்பளப் பிரச்சினை, சுய காணித் தேவை, மாணவர்களின் கல்வி பின்னடைவு போன்ற பல சிக்கல்கள் இருந்து வருகின்ற நிலையில், மலையக அரசியல் தலைமைகள் வெறும் வாய்ச் சவடால்களால் தமக்குள், பல முரண்பாடுகளை உருவாக்கி, அப்பாவி  மக்களைப்  பகடைக்காய்களாகப் பயன்படுத்தி வருகின்றமை வேதனைக்குரிய விடயமாகும். இதை அறியாத மலையகச் சமூகம், தொடர்ந்து அரசியல் தலைமைகளுக்கு அடிபணிந்து செல்கின்றது. 
நாட்டில், பாரத பிரதமரின் வருகை முக்கியமான தலைப்பாக இருந்தாலும் மலையகத்தில் அரசியல் கட்சிகள், தலைமைகளுக்கு இடையில் யார் வரவேற்பது, யார் உடன்படிக்கைகளை மேற்கொள்வது தொடர்பான பல முறுகல் நிலைகள் ஏற்பட்ட வண்ணமே இருந்தது. 
அரசியல்வாதிகளின் பொய்ப் பிரசாரங்கள், மக்களை மேலும் துன்ப நிலைக்கு இட்டுச்செல்கின்றது. பாரதப் பிரதமரின் வருகையையொட்டி, நடைபெற்ற அலங்கோலங்கள், இதுவரை காலமும் மூடப்பட்ட வைத்தியசாலை திறக்கப்படுவதும், பாதைகள் செப்பனிடப்படுவதும், பாடசாலைகள் மூடப்படுவதும் வெறும்  கேலிக்கூத்தாகவும் வெளிவேசம் போடுவதையே காட்டிநின்றது. 
சொந்த மண்ணில் இதுவரை காலம் சுகங்களை அனுபவிக்காத எம்மவர்கள், ஓர் அரசியல்வாதி, கால்தடம் பதிப்பதால்தான் அந்தச் சுகங்களை அனுபவிக்க வேண்டியிருப்பது வேதனைக்குரிய விடயமாகும்.
 மலையக தோட்டங்களில் வேலைகள் நிறுத்தப்பட்டு, பாடசாலைகள் மூடப்பட்டு, இந்தியப் பிரதமரை பார்க்கும் நோக்கில், சாரை சாரையாக நாட்டின் எல்லா பக்க மலையக உறவுகளும் ஹட்டன் பிரதேசத்தை நோக்கிச் சென்றிருந்தனர். இந்நிலை, மலையக மக்களின் அறியாமையை வெளிக்காட்டுகின்றது. 
இவ்வாறான நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் எம் தலைமைகள் ஏன், தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை, கல்விப் பிரச்சினை, ஆசிரியர்  பற்றாக்குறை ஆகிய பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதில் காலதாமதப்படுத்துகின்றனர் என்பது சிந்திக்கவேண்டிய விடயமாகும்.  மலைகத்தின் கல்விசார் சமூகமும் அரசியல்வாதிகளுக்குச் சோரம்போகும் நிலையே காணப்படுகின்றது.  
மோடியின் வருகையில் அக்கறை காட்டிய அரசியல் தலைமைகள், கல்வி நிலையில் பின்தங்கிப் போகும்,  எமது சமூகத்தைத் துளியும் கருத்திற்கொள்வதில்லை. பாதை எங்கும் தோரணம், கட்டவுட்கள், சுவரொட்டிகள், மேளதாளங்கள், தாரைதப்பட்டையென கொண்டாடப்படும் ஒருநாள் விழா, மக்களுக்கு சந்தோசத்தை ஏற்படுத்தினாலும், மனங்களில் ஏற்பட்ட மாறாவடு தொடர்ந்த வண்ணமே இருக்கும். 
அன்று, ‘கள்ளத்தோணிகள்’ என்று பட்டம்சூட்டப்பட்டு நாடுகடத்தப்பட்ட எம் உறவுகள், குடியுரிமை பறிக்கப்பட்ட எம் உறவுகள், இன்று சொந்தக்காணி இல்லாமல் நாட்டுக்காக உழைத்து தம் உயிரைத் தியாகம் செய்கின்றனர்.     இது,  30 வருடகால வடக்கு, கிழக்கு யுத்த நிலையைவிட கொடிய வேதனையாகும். 
அன்று அமரர் பெ.சந்திரசேகரன் கூறிய காணித் திட்டம், இன்றும் சாத்தியப்படாத நிலையிலும் ஒன்பதுக்கும் மேற்பட்ட மலையக அரசியல் தலைமைகள் இருந்து செயற்படுத்த முடியாத நிகழ்வாகவும் காணப்படுகின்றது.
 எனினும், ஒட்டுமொத்த நாட்டின் தமிழ்ச் சமூகமும் அரசியல் தலைமைகளால் ஏமாற்றப்பட்டு, சந்தர்ப்பத்துக்கு மாத்திரமே பயன்படுத்தப்பட்டுவரும் நிலைமையே தொடர்கிறது.  
பெருந்தோட்டத் தொழில் தொடர்பாகக் காணப்படும் பிரதான பிரச்சினை யாதெனில், அத்தொழில் பற்றிய சமூக அங்கிகாரத்தைப் பெறுவதாகும். பெருந்தோட்டங்களில் வேலை நிலைமைகளும் மோசமான சுகாதார மற்றும் கல்வி வசதிகள்  மற்றும் மிக இறுக்கமான மேலிருந்து கீழான முகாமைத்துவ முறைமையும் இத்தகைய மனப்போக்குக்குக் காரணமாகும். 
பெரும்பான்மைச் சமூகத்தைப் பொறுத்துவரை, பெருந்தோட்டத் தொழிலாளர் சமூகத்தை இலங்கையின் முக்கியமானதோர் சமூகப் பிரிவாகவோ பொருளாதாரத்துக்குப் பங்களிப்புச் செய்யும் முக்கியமானதோர் பிரிவாகவோ ஏற்றுக்கொண்டு அங்கிகரிக்கும் மனப்பக்குவம் இன்னும் ஏற்படவில்லை.  
1980 களில் மலையகக் கட்சிகள் அரசாங்கத்தை தெரிவு செய்யும் கட்சிகளாக இருந்ததாக உறுத்தலுடன் நோக்கப்பட்டது. தொண்டமான் அவர்களின் தலைமைத்துவத்துடனான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் இதில் முக்கியம் பெற்றன. ஜே. ஆர். ஜயவர்த்தன அறிமுகப்படுத்திய அரசியல் அமைப்பின் காரணமாக, பின்வந்த காலப்பகுதியில் அரசமைக்கும் கட்சிகளுக்கு, சிறுபான்மைக் கட்சிகளின் ஒத்துழைப்பு தேவையானதாக இருந்தது. 
இதைப் பயன்படுத்திக் கொண்ட பிரதான மலையக கட்சிகள், அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதன் மூலம், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நன்மைகளை, குடியுரிமை, சம்பளம்,கல்வி, சுகாதாரம் போன்ற விடயங்களை பெற்றுக்கொடுத்துள்ளதை எவரும் குறைத்து மதிப்பிடமுடியாது.
எனினும் அரசியல் பலத்தைப் பயன்படுத்தி மலையக மக்களின் நிலைமைகளை மேம்படுத்த இதைவிடக்கூடுதலான பங்களிப்பைச் செய்திருக்கலாம் என விமர்சிக்கப்படுகின்றது. 
எவ்வாறாயினும், இன்றைய சூழ்நிலையில் எவருமில்லை. மாறாக சிறுபான்மைக் கட்சிகள் யாவும் காலைச் சுற்றும் நாய்க்குட்டிகளின் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமையும் தெளிவாகத் தெரிகிறது. 
விடுதலைப் புலிகளின் இராணுவ ரீதியிலான தோல்வி, எதிர்க்கட்சியின் பலவீனம், அரசியல் குத்துவெட்டுகள், கட்சித்தாவல்கள் போன்றவை காரணமாக அறுதிப் பெரும்பான்மையுடன் கூடிய அரசியற்பலம் ஆட்சியாளருக்கு உண்டு.
எனவே, சிறுபான்மைக் கட்சிகளின் தயவில் தங்கியிருக்க வேண்டிய அவசியம் கிடையாது. இதுவே 1980-2007 வரையில் தென்னிலங்கை அரசாங்கங்கள் எதிர்நோக்கிய முக்கிய பிரச்சினையாக இருந்தது. சிறுபான்மைக் கட்சிகளின் தயவின்றி ஆட்சியமைப்பதே விரும்பத்தக்க ஒன்றாக அவர்களுக்கு இருந்தது தற்போது நிறைவேறியுள்ளது.
மலையகத் தலைமைகளின் பலவீனம் காரணமாக, இளைஞர் சமூகம் நம்பிக்கை இழந்த நிலையில் காணப்படுகிறது. அண்மையில் நடந்த பொதுத்தேர்தலில் மலையகத்தைச் சாராத ஒரு வேட்பாளர், நுவரெலிய மாவட்டத்தில் வெற்றியீட்டி நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியிருந்தமையும் இந்த  நம்பிக்கையீனத்தின்  வெளிப்பாடாகவே நோக்கப்படலாம். 
அதேவேளை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் மலையக் கட்சிகள், அம்மக்களின் முன்னோக்கிய சமூக அசைவுக்கு பங்களிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆயினும் கோரிக்கைகளை வலுவாக முன்வைக்கக்கூடிய சூழல் தற்போதில்லை.
எனவே சிவில் சமூக அமைப்புகள் மலையக மக்களின் மேம்பாடு குறித்துக் கவனம் செலுத்த வேண்டிய கட்டாய தேவை உள்ளது. மக்களின் அடிப்படைத் தேவைகள் கல்வி, சுகாதாரம், தொழிற்பயிற்சி, தொடர்பான தகவல்களைத் திரட்டி திட்டங்களை வகுக்கவேண்டிய தேவையுள்ளது. குறிப்பாக மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர் தொடர்பான புள்ளிவிவரங்கள், ஓரளவுக்குக் கிடைத்திருப்பினும் இற்றைப்படுத்தப்பட்ட புள்ளிவிவரத் தரவுகள் இல்லை. 
குறிப்பாக மலையகப் பிரதேசங்களிலிருந்து உயர்கல்வி கற்றவர்கள் மற்றும் அரச சேவைகள், தனியார் துறை என்பவற்றில் பதவிநிலை தொழில்வாய்ப்புகளில் உள்ளவர்கள் குறித்த விவரங்கள் மற்றும் பெருந்தோட்டப் பகுதிகளுக்கு வெளியில் தொழில் வாய்ப்பில் ஈடுபட்டுள்ளோர் பற்றிய விவரங்கள் உள்ளிட்ட அடிப்படைத் தரவுகளின் பற்றாக்குறை மலையகப் பெருந்தோட்டத்துறைச் சமூகம் பற்றிய ஆய்வுகளைச் செய்வதில் பெருந்தடையாக உள்ளது. 
மறுபுறம் மலையகச் சமூகமானது சமூக அங்கிகாரம் தொடர்பில் ஓரங்கட்டப்பட்ட சமூகமாகவும் அரசியல் மற்றும் இனரீதியான மோதல்களின் போது, அடிவாங்கும் சமூகமாகவும் உள்ளது.
பெரும்பான்மையாகத் தமிழ்பேசும் மக்களைக் கொண்டுள்ள, பெருந்தோட்டத்துறையைக் கையாளும் அமைச்சு, அப்பெருந்தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளின் கைகளிலன்றி, பெரும்பான்மையின அரசியல்வாதிகளின் கைகளில் உள்ளமை மலையக மக்களின் சமூக, பொருளாதார, அரசியல்,செல்நெறிகள் எத்திசையில் நகரும் என்பதைப் புரிந்துகொள்ளப் போதுமானதாகும். 
இவ்வாறானதொரு பின்புலத்தில் மலையக அரசியல்வாதிகள், கல்விச் சமூகத்தினர்,  சிவில் அமைப்புகள், இளைஞர் சமுதாயம் என்பன எவ்வாறு இயங்கப் போகின்றன? சமூக முன்னேற்றத்துக்கு எவ்வாறு பங்களிக்கப் போகின்றன என்பதே எமக்கு முன்னுள்ள வினாவாகும். 
கடந்த காலங்களைப் போலவே, இனிமேலும் பெருந்தோட்ட தொழிலாளர்களினால் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள், முரண்பாட்டு அரசியலை மேற்கொள்ள  முடியாது. இன்றைய சூழலில் அது எவ்விதத்திலும் சாத்தியமில்லை. அதனால் மலையக சமூகத்தினருக்கு எவ்வித நன்மைகளும் ஏற்படப்போவதில்லை. 
அதேவேளை மலையக அரசியல்வாதிகள் தமது சுயநல அரசியலைக் கைவிட்டு, தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் மேம்பாட்டுக்காகக் கூடுதலான பங்களிப்பைச் செய்ய முன்வரவேண்டும். சாத்தியமான எல்லாச் சந்தர்ப்பங்களிலும் கிடைக்கும் வாய்ப்புகளை மலையக மக்களுக்கு நம்மை தரும் வகையில் பயன்படுத்த வேண்டும். 
மலையகப் புத்திஜீவிகள், அதிகார வர்க்கத்தினர், முயற்சியாளர்களை ஒருங்கிணைத்த நிபுணர்கள் சபையொன்று உருவாக்கப்பட வேண்டும். பேரம் பேசுதல்களின்போது, இந்த நிபுணர் குழுவின் பொருத்தமான அங்கத்தவர்களின் பங்குப்பற்றல் இருக்கவேண்டும். நிபுணர்குழு மலையக மக்களின் தேவைகள், முன்னேற்றம் என்பவற்றுக்கான சிந்தனை மற்றும் சாத்தியமான திட்டங்களை வகுக்க  வேண்டும். 
இத்திட்டங்களிடையே ஒருங்கிணைப்பும் தொடர்பாடலும் இருக்கவேண்டும். அரசியல்வாதிகள் இத்திட்டங்களுக்கு அவசியமான நாடாளுமன்ற அங்கிகாரத்தையும் சட்ட வலுவையும் பெற்றுக் கொடுப்பவர்களாகச் செயற்படவேண்டும். 
மலையகப் பெருந்தோட்ட மக்களின் சமூக அபிவிருத்தி, சமூகஅங்கிகாரம், சமூகப்பிரதிநிதித்துவம், சமூகத்துக்காக் குரல் எழுப்பும் தன்மை என்பவற்றை மேம்படுத்துவதே எல்லோரதும் முக்கிய குறிக்கோளாக இருக்கவேண்டும். பெருந்தோட்ட மட்டத்தில் விழிப்புணர்வுக் குழுக்கள், மேம்பாட்டுக் குழுக்கள் ஆகியவை அமைக்கப்பட வேண்டும். 

உள்ளூர் பொலிஸாரின்  அனுசரனை இதற்குப் பெறப்பட வேண்டும். ஏற்கெனவே இருக்கின்ற அமைப்புகள் வலுப்படுத்தப்படவேண்டும். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை வாழ்க்கை முதல், அரசியல் அபிலாஷைகள் வரையிலான முறையான திட்டமிடலொன்றும் தாபன ரீதியான கட்டமைப்பொன்றும் உருவாக்கப்பட்டு, அரசியல் அனுசரனையுடன் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
 இவ்வாறானதொரு கட்டமைப்பு மாற்றம் ஏற்படாவிட்டால் அரசியல், சமூக, பொருளாதார ரீதியான முன்னோக்கிய அசைவு மந்தகதியுடன் சமூகத்துடன் தொடர்பற்ற எவரும், தமது அரசியல் பிரவேசத்துக்கான இலவச ஓடுபாதையாக, மலையக சமூகத்தைப் பயன்படுத்தும் நிலை தவிர்க்க முடியாததாகிவிடும். 
-சி.அருள்நேசன்-
நன்றி- தமிழ் மிரர்

பெய்திலி தோட்டத்தில் ஆர்ப்பாட்டம்

0
0
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெய்திலி தோட்டத்தில் தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். தோட்ட உத்தியோகஸ்த்தர் ஒருவர் தனக்கு தோட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்ட வீட்டை சொந்தமாக்கி கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்தநிலையில் குறித்த தோட்ட உத்தியோகஸ்த்தர் அத்தோட்டத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டது 7 வருடங்களுக்கு மேலாகியுள்ளது.ஆனால் தோட்ட நிர்வாகத்தால் தோட்ட உத்தியோகஸ்த்தருக்கு வழங்கப்பட்ட வீடுகள் திரும்ப பெற வேண்டும் என்பது பெருந்தோட்ட சட்டத்தில் உள்ளது.

இதனை மீறி, வழங்கப்பட்ட வீட்டுக்கு உரிய சட்ட பூர்வமான ஆதாரங்களை தன்னிடத்தில் வைத்துக் கொண்டு இவ்வீட்டை ஆக்கிரமித்துள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏனைய தோட்ட உத்தியோகஸ்த்தர்களும் பணியாற்றுகின்ற நிலையில் குறித்த உத்தியோகஸ்த்தர் தனது தற்காலிகமான வீட்டை சொந்தமாக்கி கொள்வது எதிர்காலத்தில் பாரிய சிக்கல்களை உருவாக்கும் என்பதை காரணங்காட்டி தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பியவண்ணம் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

மலையக சமூக அபிவிருத்தியில் அக்கறையற்ற பெருந்தோட்ட கம்பனிகள்

0
0
கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் பெருந்தோட்டப் பாடசாலைகளின் வள அபிவிருத்திக்காக தேவையான காணிகளைப் பெற்றுக் கொள்வதில் பெரும் சங்கடங்களை எதிர்நோக்குவதாக அண்மையில் தெரிவித்திருந்தார். வரவு செலவுத் திட்டங்களில் மலையகப் பெருந்தோட்டப் பாடசாலை அபிவிருத்திக்காக நிதியொதுக்கீடு செய்யப்படுகின்றது. மாகாணசபை மட்டத்திலும் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. நிதி ஒதுக்கீடுகளும் நடைபெறுகின்றன. இருந்தும் இதற்கான காணிகளைப் பெற்றுக் கொள்வதில்தான் முட்டுக்கட்டைகள் நிலவுகின்றன.
காணிகளை குத்தகைக்கு எடுத்துள்ள 22 கம்பனிகளும் இதில் இறுக்கமான நடைமுறையையே கையாள்கின்றன. 1992 ஆம் ஆண்டு பெருந்தோட்டங்களை அரசாங்கம் தனியார் கம்பனிகளிடம் குத்தகைக்குக் கொடுத்தது. அப்போது தோட்ட மக்களின் சகல தேவைகளையும் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு கம்பனிவசம் சார்ந்தது. அரசாங்கத் தரப்பிலும் கம்பனிகள் தரப்பிலும் பல்வேறு உறுதிமொழிகளும் வழங்கப்பட்டன. பெருந்தோட்டத் துறையை இலாபகரமான தொழிற்றுறையாக மாற்றுவதும் அதன்மூலம் தோட்டத் தொழிலாளரின் வாழ்வியலை மேம்படுத்துவதுமே தோட்டங்களைக் கைமாற்றம் செய்வதன் நோக்கம் என அரசு தரப்பில் வியாக்கியானம் தரப்பட்டது. இதற்கு சகல ஒத்துழைப்புகளும் தாம் வழங்கத்தயாராக இருப்பதாக தோட்டக் கம்பனிகள் சான்றுரைத்தன. இவையெல்லாவற்றையும் ஆமோதிப்பது போல மலையக தொழிற்சங்கங்கள் மெளனம் சாதித்தன.
ஆனால் உறுதிமொழி வழங்கியபடி எதுவுமே நடைபேறவில்லை. பிரிட்டிஷார் காலத்தில் மலையக மக்களுக்குச் சொந்தமானவை என கருதப்பட்ட லயக்குடியிருப்புகள் இன்று தோட்டக் கம்பனிகளுக்கு உரித்தாக்கப்பட்ட நிலைமையே காணப்படுகின்றது. ஏனெனில் இன்றைய நிலையிலும் கூட அறைகளைப் பெருப்பித்தல், வீட்டை விசாலமாக்கல் தோட்ட நிர்வாகங்கள் அனுமதித்தால் மட்டுமே செய்யக்கூடியதாக உள்ளது.
இம்மக்களுக்கு தோட்டக் காணிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட சிறு சிறு நிலத்துண்டுகள் வழங்கப்பட்டிருந்தாலும் அதற்கு உரிமை கோரமுடியாது. தவிர இத்துண்டு நிலங்களை விவசாய நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். வெள்ளையர் காலத்தில் சுகாதாரம் பேணப்பட்டது. வேலை வாய்ப்புகள் இருந்தன. லயக்குடியிருப்புகள் என்றாலும் அவை முறையாக பராமரிக்கப்பட்டன. இன்று சொந்தமாக வீடில்லை. காணி உரிமையில்லை. கல்வி அபிவிருத்திக்கான பின் புலங்கள் இல்லை. சகாதார நிலைமைகள் மோசமாகிப் போயுள்ளன. தனியார் கம்பனிகள் அரசு துறை நிறுவனங்களான அரச பெருந்தோட்ட யாக்கம், மக்கள் தோட்ட அபிவிருத்திச்சபை, எல்கடுவ பிளான்டேஷன் என அனைத்தும் தோட்டங்களை காடாக்கிக் கொண்டிருக்கின்றன.
இன்று தோட்ட நிர்வாகங்கள் தாம் நினைத்தமாத்திரத்தில் தொழிலாளர்களைத் தோட்டங்களை விட்டு வெளியேற பணிக்கின்றன. தோட்டங்களைக் கூறு போடுகின்றன. வெளியாருக்குக் கைமாற்றுகின்றன. இதனடிப்படையில் தோட்டக்காணிகளை தமது விருப்பிற்கேற்ப கையாளும் சகல உரிமைகளையும் இக் கம்பனிகள் கொண்டிருப்பதாகவே கருதமுடியும்.
பாராளுமன்றத்தில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதில் அளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மலையக மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்ய தேவையான காணிகளைப் பெறுவதில்தான் நெருக்கடி இருப்பதாக கூறியிருந்தார். இது உண்மையிலேயே குழப்பமான விடயமாகும். அரசுக்கும் கம்பனிகளுக்கும் அவசியமென்றால் அதிரடியாக காணிகளைக் கையாடல் செய்யமுடிகின்றது. அதுவே பெருந்தோட்ட மக்களுக்குத் தேவை என்றால் மட்டும் சட்டச் சிக்கல் ஏற்படுகிறதாம். தேசிய ரீதியிலான காணிக் கொள்கை இருந்தும் தோட்டக் காணிகளை மலையக மக்களின் அத்தியாவசிய தேவைக்காக பெறுவதில்தான் எத்தனை சவால்கள். சங்கடங்கள் தடைகள்!
தோட்ட மக்களுக்கு வீடமைப்புக்கு காணி என்றாலும் சரிபாடசாலைத் தேவைக்குக் காணி என்றாலும் சரி, கம்பனி தரப்பு தவறாமல் ஒரு கூற்றை முன்வைக்கும். காணிகள் வழங்கப்படும் பட்சத்தில் விளைச்சல் நிலங்கள் வீணாகிப்போகும், அழிவடையும் என்பதுதான் அது. இதற்காக சில தோட்ட நிர்வாகங்கள் புது ஆலோசனைகளை வழங்குவதாக தெரியவருகின்றது. தற்போது மக்கள் வாழ்ந்துவரும் லயங்களிலிருந்து அவர்களை வெளியேற்றி தற்காலிக இடங்களில் தங்க வைத்துவிட்டு அவர்களின் லயக்குடியிருப்புகளை இடித்துத் தரைமட்டமாக்கி அதே இடத்தில் புதிதாக வீடுகளைக் கட்டும் யோசனையும் அதில் ஒன்று. இதன்மூலம் வீடமைப்புக்காவும் பாடசாலைக் கட்டிடங்களை நிர்மாணிப்பதற்காகவும் சிறுவர் முன்பள்ளி விளையாட்டு மைதானம் போன்றவற்றை அமைப்பதற்கும் இடம் வழங்குவதைத் தவிர்ப்பதே கம்பனிகளது நோக்கமாகும். பெருந்தோட்டப் பாடசாலைகள் அனைத்துமே அரசுடைமையாக்கப்பட்டுள்ளன. தேவைக்கேற்ப கற்பித்தல் கற்றல் நடவடிக்கைகளுக்கான நிதியினை மத்திய மாகாண அமைச்சுகள் ஒதுக்கவேண்டியுள்ளது. அவ்வாறே நடைபெறவும் செய்கின்றது. ஆனால் பாடசாலைகளுக்கான காணிகளைப் பெற்றுக் கொடுப்பதில் இழுபறிநிலையே காணப்படுகின்றது. அரசுடைமையாக்கப்பட்ட சகல பாடசாலைகளுக்கும் தலா இரண்டு ஏக்கர் காணி ஒதுக்கப்பட வேண்டும் என்ற சட்ட ஏற்பாட்டைக் கூட சில தோட்ட நிர்வாகங்கள் அசட்டை செய்து வருகின்றன. இந்நிலையில் மேலதிக காணிகளைப் பெறுவது அப்படியொன்றும் இலகுவான காரியமாக இருக்கப் போவதில்லை.
மலையகக் கல்வி அபிவிருத்திக்காக பாடசாலைக் கட்டடங்கள் விரிவாக்கப்பட வேண்டியது அவசியம். ஆனால் குறித்த நேரத்தில் இதற்கான காணி ஒதுக்கித் தரப்படாத நிலையில் குறித்த வேலைகள் ஸ்தம்பிதமடைந்து போகின்றன. குறிப்பாக மலையக பாடசாலைகளில் இடப் பற்றாக்குறை என்பது பாரிய பிரச்சினையாக உள்ளது. இதனால் மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குன்றனர். அத்துடன் மத்திய, மாகாண கல்வித் திணைக்களங்களுக்கூடாக ஒதுக்கப்படும் நிதி பயன்படுத்தப்படாமல் முடங்கிப்போகிறது. அல்லது திறைசேரிக்குத் திருப்பியனுப்பப்படுகிறது. இது போன்றச் சம்பவங்கள் ஏற்கனவே நிறைய நடந்துள்ளன. இதுபற்றி மலையக பிரதிநிதிகள் பாராளுமன்றத்திலும் மாகாண சபைகளிலும் பிரஸ்தாபிக்கவே செய்கிறார்கள். ஆனால் தீர்வுதான் வந்தபாடில்லை. எனவே ஆளுக்காள் அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் விளைச்சல் தரக்கூடிய பெருமளவு காணிகள் உரிய பராமரிப்பின்றி காடுகளாகவும் தரிசு நிலங்களாகவும் மாறிக் கொண்டிருக்கின்றன. ஆனால் 200 வருடங்களாக படாத பாடுபட்டு நாட்டுக்குச் செல்வத்தைத் தேடித்தரும் பெருந்தோட்ட மக்களின் வீட்டுத் தேவைகளுக்கும் அவர்களது வாரிசுகளின் கல்வி அபிவிருத்திக்கும் அவசியமான காணிகளை வழங்குவதில் கம்பனி தரப்புக் காட்டும் பிடிவாதம் தயக்கம் அசிரத்தை ஆச்சரியத்தை ஏற்படுத்தவே செய்கின்றது. ஒரு வேளை பெருந்தோட்டச் சமூகம் கல்வியறிவு பெற்ற சமூகமாக வளர்ச்சியடைவதில் கம்பனிகளுக்கு விருப்பம் இல்லையோ என்னவோ! அதேபோல பிற சமூகங்களைப் போல சொந்தக் காணியில் சொந்த வீட்டில் குடியேறுவதைச் சகித்துக் கொள்ள முடியாமல் இருக்கின்றதோ தெரியவில்லை. மனிதருக்கு சொந்தக்காணியில் சொந்த வீடு என்பது வாழ்வுரிமையின் அடையாளம். அதேபோல கல்வி என்பது அபிவிருத்திக்கான அடைவு மட்டம். அந்த இரண்டும் இல்லாத சமூகமாக இன்னும் எத்தனை காலம் தான் இருப்பதாம்? 

இறப்பர் தொழில்துறைக்கு புத்துயிரளிக்கும் திட்டங்கள்

0
0
வெள்ள அனர்த்தம் காரணமாக தாய்லாந்தின் இறப்பர் உற்பத்தி நூற்றுக்கு 76 வீதத்தால் 2017ம் ஆண்டு குறைவடையுமென்றும், அந்நாட்டின் இறப்பர் உற்பத்தி 4.38 இலட்சம் மெட்ரிக் தொன்னாக குறையுமென்றும் அந்நாட்டு இறப்பர் அதிகார சபை கூறியதாக ரொய்ட்டர் பத்திரிகையின் பொருளாதார ஆய்வு அறிக்கையில் ஜனவரி மாதம் 20ம் திகதி கூறப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் அனைத்தும் தற்போது இலங்கைக்கும் பொருத்தமாகவுள்ளன. ‘வெள்ளத்தில் மூழ்கிய அநேகமான இறப்பர் மரங்கள் மடிந்து வருகின்றன. இயற்கை இறப்பர் உற்பத்தி நாடான தாய்லாந்தில் மழை காரணமாக இறப்பர் மரங்களில் சரியான முறையில் பால் வெட்ட முடியாது போயுள்ளது. நான்கு வருடங்களுக்குப் பின்னர் இறப்பருக்கு அதிகபட்ச விலை கிடைக்கும் வேளையிலேயே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது. ஒரு இறப்பர் மரத்தில் இறப்பர் பால் வெட்டுவதற்கு ஏழு வருடங்கள் காத்திருக்க வேண்டும் என அந்த அறிக்கை கூறுகின்றது.
இலங்கையில் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக அதிகமாகப் பாதிப்படைந்த களுத்துறை மாவட்டமானது தேயிலை இறப்பர் மற்றும் கறுவா பயிரிடப்படும் செழுமையான பிரதேசமாகும். அதேபோல் இரத்தினபுரி, கேகாலை மற்றும் காலி மாவட்டங்களிலும் இறப்பர் செய்கையில் பாதிப்பு ஏற்பட்டதாக அறிக்கைகள் கூறுகின்றன. பாதிப்பின் அளவு தற்போது மதிப்பிடப்பட்டு வருகின்றது.
பயிர்ச் செய்கையாளர்களுக்குள்ள ஒரு பிரச்சினை என்னவென்றால் தேவையான இறப்பர் கன்றுகளை பெறமுடியாதிருப்பதாகும். அதிகரித்திருக்கும் இத்தேவையை பூர்த்தி செய்ய பெருந்தோட்டத்துறை அமைச்சு ஒட்டு இறப்பர் மரக்கன்று நாற்பது மேடைகளை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது.
வெலிகடமுல்ல, மீரிகம, எகல்ஓய, குருகொட, கரபிங்ச, மிந்தெனிய மற்றும் கும்புக்கன் ஆகிய இடங்களில் அரசு நாட்டு மேடைகளை அமைத்துள்ளதோடு தனியார் நாற்று மேடை கன்று உற்பத்தியாளர்களுக்கு 2017 ஆகஸ்ட், செப்டெம்பர் மாதத்துக்கான வணிக மட்டத்திலான பயிர் உற்பத்தி பொருட்களுக்கு தேவையான அனுமதிப் பத்திரத்தை வழங்குவதற்கான விண்ணப்பப்படிவங்கள் கடந்த வாரம் 30ம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்பட்டன.
அனுமதிப்பத்திரம் பெறும் நாற்றுமேடை இடுபவர்கள் இம்மாதம் 31ம் திகதிக்குள் பாத்தியிடும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும். அதேபோல் பாத்தி அமைப்பதற்கு எதிர்பார்க்கும் இடங்களையும் பரிசீலனைக்கு உட்படுத்தி இருக்க வேண்டும்.
இறப்பர் பயிர்ச் செய்கையை முற்றாக மாற்றியமைக்க வேண்டிய நிலைமையிலேயே இருந்தது. அவ்வேளையிலேயே வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டது. 2016ம் ஆண்டு இலங்கை பெற்றுக்கொண்ட இறப்பர் உற்பத்தியானது கடந்த 50 வருடங்களில் பெற்றுக்கொண்ட மிகக் குறைந்த உற்பத்தியாகுமென 2016ம் ஆண்டு இலங்கை மத்திய வங்கி அறிக்கை கூறுகின்றது. 2016ம் ஆண்டு புதிதாக 592 ஹெக்டேயர் காணியிலேயே இறப்பர் பயிர் செய்யப்பட்டது. 2015ல் 769 ஹெக்டேயர், 2014ல் 1428 ஹெக்டேயரும் புதிதாக நடப்பட்டுள்ளன. இவ்வாறு பழைய மரங்கள் அகற்றப்பட்டு புதிதாக இறப்பர் கன்றுகள் 2016ம் ஆண்டு 591 ஹெக்டேயரில் நடப்பட்டன.
சாதாரணமாக இறப்பர் மரமொன்றிலிருந்து பால் வெட்டுவதற்கு 6 வருடங்கள் செல்ல வேண்டும். அந்த 30 வருடங்கள் நல்ல பலனைத் தரும். அவ்வாறு பார்க்கும்போது 2015ல் பாலை வெட்டக் கூடிய மரம் 2011ம் ஆண்டு நடப்பட்டதாகும். அவ்வாறான காணியின் அளவு 6504 ஹெக்டேயராகும். 2019ல் 4673 ஹெக்டேயர் காணிகளிலுள்ள மரங்களிலேயே பால் வெட்டப்படும்.
இறப்பர் செய்கையின் பாதிப்புக்கு முக்கியமான காரணம் சர்வதேச இறப்பர் விலை குறைவாகும். அதற்குக் காரணம் எண்ணெய் விலை குறைந்து செயற்கை இறப்பர் விலை குறைந்ததாகும்.
தோட்ட கம்பெனிகள் இறப்பருக்குப் பதிலாக கொப்பறா மற்றும் கறுவா உற்பத்தியில் ஈடுபட்டு நட்டத்தை ஈடுகட்டியதாக வருடாந்த அறிக்கைகள் கூறுகின்றன. சிறிய தோட்டச் செய்கையாளர்கள் இறப்பர் செய்கையிலிருந்து விலகத் தொடங்கியுள்ளார்கள். தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் தொழிலாளர்களுக்கு அதிகளவு கூலிகொடுக்க வேண்டிய நிலைமை உருவானதால் பயிர்ச் செய்கையை கைவிட காரணமாக அமைந்தது. வர்த்தக சபை பேச்சாளர் ஒருவர் உலக கையுறை தேவையானது தினம் தினம் அதிகரித்து வருவதாகவும் இறப்பர் கையுறை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு தொடர்ந்து கேள்விகள் கிடைப்பதாகவும் ஆனாலும் அதில் போட்டி நிலவுவதாகவும் கூறினார். காரணம் சீனாவும் வியட்நாமும் சந்தையில் பிரவேசித்திருப்பதாகும்.
கடின டயர் மற்றும் வாயுவிலான டயருக்கு அமெரிக்கா, பிரேஸில் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் பெரும் கிராக்கி உள்ளதாகவும் ஐரோப்பிய யூனியன் வர்த்தக சந்தையிலும் இறப்பர் உற்பத்திப் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு உண்டென்றும் வர்த்தக சபை கூறுகின்றது. இவற்றைக் கருத்தில் கொண்டு உள்ளூர் இறப்பர் உற்பத்தி தொழிலை பாதிப்பிலிருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது 79,100 மெட்ரிக் தொன்னான தேசிய இறப்பர் உற்பத்தியை இரண்டு லட்சம் மெட்ரிக் தொன்னாக அதிகரிக்க இறப்பர் அபிவிருத்திப் பிரிவு மூலோபாய வழிகளை மேற்கொண்டுள்ளது.
சிறிய தோட்ட உரிமையாளர்களுக்கு இறப்பரை மீள பயிரிட மற்றும் புதிதாகப் பயிரிட 2016ம் ஆண்டு 372.9 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இறப்பர் பயிரிடப்படாத (சம்பிரதாய இறப்பர் காணி அல்லாத) மாவட்டங்களிலும் இறப்பர் பயிர்ச் செய்கையை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி முல்லைத்தீவு மற்றும் வவுனியா போன்ற பிரதேசங்களிலும் இறப்பர் பயிர்ச் செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அனைத்து புதிய பயிர்ச் செய்கைக்கும் தேவையான இறப்பர் கன்றுகள் கும்புக்கன் ஓயவில் அமைந்துள்ள நாற்று மேடையிலிருந்தே பெறப்படுகின்றன. அரசுக்குச் சொந்தமான இந்த நாற்று மேடையில் 50,000 கன்றுகள் வளர்க்கலாம். அதனை ஒன்று தொடக்கம் 1 ½ இலட்சமாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதைத் தவிர பதியத்தலாவையிலும் நாற்று மேடை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இறப்பர் செய்கையை மேம்படுத்த மண்ணின் வளத்தை அதிகரித்தல் உயர் தரத்திலான சீட் இறப்பர் உற்பத்தி, அதிக பலனைத் தரும் குளோரின் வகையிலான நோய் எதிர்ப்பு குளோரினை அறிந்துகொள்ளல் உள்ளிட்ட பலவித பரிசோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன. இறப்பர் தொழில் தொடர்பான சர்வதேச நிறுவனமன சர்வதேச இறப்பர் மகாநாடு 1944ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. விற்பனை உள்ளிட்ட இறப்பர் தொழிலுடன் தொடர்புடைய முப்பது நாடுகள் இதில் அங்கத்துவம் வகிக்கின்றன. அதைத் தவிர வேறு நிறுவனங்கள் 120ம் அங்கத்துவம் பெற்றுள்ளன. இம் மகாநாடு 2018ம வருடம் இலங்கையில் நடைபெற அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. இலங்கைக்கு ஐரோப்பிய சங்க நாடுகள் பங்குபற்றுவது நல்ல பலனைத் தரும். இலங்கையில் இறப்பர் தொழிலுக்கு இம்மாநாட்டின் மூலம் நன்மைகள் கிடைக்கும்.
கருணாரத்ன அமரதுங்க
நன்றி- தினகரன்

நிலுவைச் சம்பளத்தை வழங்கவேண்டுமென்ற ‘ஏற்பாடோ, தேவைப்பாடோ இல்லை

0
0
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பாக, முதலாளிமார் சம்மேளனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தில், கூட்டொப்பந்தம் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படல் வேண்டும் என்றோ, நிலுவைச் சம்பளம் வழங்கப்படவேண்டும் என்ற ஏற்பாடுகளோ, தேவைப்பாடுகளோ இல்லையென, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், உயர்நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.   
ஆகையால், கூட்டொப்பந்தத்துக்கு எதிராக, மக்கள் தொழிலாளர் சங்கம் தாக்கல் செய்துள்ள ரிட் மனுவை தள்ளுபடி செய்யும்படியும் கோரியுள்ளது. 

கூட்டொப்பந்தத்தை இரத்துச் செய்யக்கோரி மக்கள் தொழிலாளர் சங்கம் தாக்கல் செய்துள்ள ரிட் மனு மீதான தனது ஆட்சேபனையிலேயே இ.தொ.கா. மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.   
உயர்நீதிமன்றத்தில் கையளிக்கப்பட்டுள்ள, சத்திய கடிதாசியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,   
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) அதன் உறுப்பினர்களின் தொழில் தொடர்பான நியதிகள் மற்றும் நிபந்தனைகளை முன்னேற்றுவதை அடிப்படையாகக் கொண்டு மாத்திரமே, 2016ஆம் ஆண்டு 35ஆம் இலக்க சம்பளக் கூட்டொப்பந்தத்தை இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துடன் செய்து கொண்டது. கூட்டொப்பந்தம் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படல்
வேண்டும் என்றோ மற்றும் நிலுவை சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்றோ ஏற்பாடுகளோ அல்லது தேவைப்பாடுகளோ இல்லை.  
அத்துடன், இதுவரை செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தங்களில் வழங்கப்பட்ட மேலதிக கொடுப்பனவுகள் ஊ.சே.நிதி (E.P.F.) ஊ.ந.நிதி (E.T.F.) சட்டத்துக்கு, உட்பட்ட சம்பாத்தியத்தில் (Earning) இணைக்கப்படவில்லை என்பதால், 2016ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்திலும் மேலதிக கொடுப்பனவுகளுக்கு ஊ.சே.நிதி (E.P.F.) ஊ.ந.நிதி (E.T.F.) உட்படாது. இவற்றுடன் ஏனைய காரணங்களையும் குறிப்பிட்டு மக்கள் தொழிலாளர் சங்கம் தாக்கல் செய்துள்ள ரிட் மனுவை தள்ளுபடி செய்யும்படி கோரியுள்ளது.  

எனினும், மக்கள் தொழிலாளர் சங்கம் தனது மனுவில் நிலுவைச் சம்பளம் என்பது, தொழிலாளர்கள் தொடர்ந்து பெற்று வந்துள்ளமையால், அது தொழிலாளர்கள் ஏற்கெனவே அனுபவித்த உரிமை என்றும், அத்தோடு, சம்பளக் கூட்டொப்பந்தங்கள் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை இடம்பெற்று வந்த நிலையில் அதுவும் ஏற்கெனவே அனுபவித்து வந்த உரிமை என்றும் அவைகள் மீறப்பட முடியாதவையெனவும் சுட்டிக்காட்டியிருந்தது.   
அத்தோடு, கொடுப்பனவுகள் உட்பட மொத்த சம்பாத்தியத்துக்கும் (Total earnings) ஊ.சே.நிதி (E.P.F.) ஊ.ந.நிதி (E.T.F.) ஆகியவற்றுக்கான பங்களிப்பு வழங்கப்படாமை அந்நியதிச்சட்டங்களை மீறும் நடவடிக்கை என்றும் கூட்டிக்காட்டிருந்தது. மேலும், 2016ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட சம்பள கூட்டொப்பந்தத்தில் 2003ஆம் செய்து கொள்ளப்பட்ட பிரதான/ முதன்மை கூட்டு ஒப்பந்தத்தை மீறி வெளியாள் உற்பத்தி முறை என்ற பெருந்தோட்டத் தொழிற்றுறையை முழுமையான மாற்றும் முறைமையை அறிமுகம் செய்வது பிரதான/ முதன்மை கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர்களுக்கு உறுதி செய்யப்பட்டிருந்த 300 நாட்கள் வேலை உரிமையை இல்லாம் செய்வதாக இருக்கின்றமை, சம்பள சூத்திரம் மிகவும் தெளிவீனமாக இருக்கின்றமை என்ற விடயங்களையும் சுட்டிக்காட்டியிருந்தது. அதனடிப்படையில், 2016ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் சட்ட அந்தஸ்த்து அற்றது என பிரகடனம் செய்து அதனை இரத்துச் செய்யுமாறு மக்கள் தொழிலாளர் சங்கம் தனது மனுவில் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.  
கூட்டொப்பந்தம் தொடர்பான குறித்த எழுத்தாணை மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான எல்.டி.பி. தெஹிதெனிய மற்றும் சி. துரைராஜா முன்னிலையில் 05.07.2017ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இளையதம்பி தம்பையா தாக்கல் செய்துள்ள இம் மனுவில் அவரே முன்னிலையாகி சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தார்.  
முன்னதாக 08.05.2017 இடம்பெற்ற குறித்த மனு மீதான விசாரணையின் போது நீதிமன்றம் சட்டமா அதிபரை மனு தொடர்பாக இணக்கப்பாட்டை எட்டமுடியுமா என்று பிரதிவாதிகளுடன் கலந்துரையாடி நீதிமன்றத்துக்கு அறிவிக்கும்படியும் இணக்கப்பாட்டுக்கு வரமுடியாத விடத்து எதிராளிகளை ஆட்சேபனைகள் இருப்பின் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கட்டளையிட்டிருந்தது.
அதனடிப்படையில் சட்டமா அதிபர் சார்பாக முன்னிலையான அரச சட்டத்தரணி இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு எதிராளிகள் தயார் இல்லை என்பதையும் எதிராளிகள் ஆட்சேபனைகளை முன்வைக்க இருப்பதாகவும் அறிவித்தார்.   
அந்தவகையில் வழக்கின் எதிராளிகளான இ.தொ.கா., தொழிற்சங்க கூட்டுக்கமிட்டி என்ற கூட்டொப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களும் கம்பனிகள் சார்பாக கைச்சாத்திடும் இலங்கை முதலாளிமார் சம்மேளனம், மற்றும் பெருந்தோட்டக் கம்பனிகள் அனைத்தும் தமது ஆட்சேபனைகளை நீதிமன்றத்துக்குச் சமர்ப்பித்திருந்தன.   
சட்டமா அதிபர், தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ஆகியோர் சார்பாக முன்னிலையாகிய அரச சட்டத்தரணி எதிராளிகளிடத்தில் இணக்கப்பாட்டினை எட்டுவதற்கு கடைசி நேரம்வரை முயற்சித்தாகவும், அதனை கருத்திற்கொண்டு ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்கு கால அவகாசத்தை வழங்குமாறு கோரி இருந்தார். இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும் தனது ஆட்சேபனைகளை முன்வைக்க கால அவகாசம் கோரியது. அதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் ஓகஸ்ட் மாதம் 08ஆம் திகதி ஆட்சேபனையை சமர்ப்பிக்காத தரப்புகளை அதனை சமர்ப்பிக்குமாறு கட்டளையிட்டது. கால அவகாசம் கோரப்பட்ட போது இவ்வழக்கு அவசரமாக விசாரித்து முடிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை நீதிமன்றம் மீண்டும் நினைவூட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த மனு, ஓகஸ்ட் மாதம் 08ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. 
நன்றி- தமிழ் மிரர்

பெருந்தோட்டங்கள் தனியாருக்கு விற்பனை: “கடுமையாக எதிர்ப்போம்

0
0
இலாபமீட்டும் அரச பெருந்தோட்டங்களை, தனியாருக்கு வழங்கும் திட்டத்துக்கு எதிராக, கடுயைமான எதிர்ப்பை நாம் வெளியிடுவோம்” என்று, இலங்கை பெருந்தோட்டச் சேவா சங்கத்தின் தலைவர் சத்துர சமரசிங்க (லங்கா வத்து சேவா சங்கம்) தெரிவித்தார்.
இலங்கை பெருந்தோட்டச் சேவா சங்கத்தின் புதியத் தலைவராகத் தெரிவான சத்துர சமரசிங்க, மல்வத்து மகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரரை, ஞாயிற்றுக்கிழமை சந்தித்து நல்லாசி பெற்றுக்கொண்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலையே, இவ்வாறு கூறினார்.
அங்கு மேலும் கூறிய அவர், இலங்கை அரச பெருந்தோட்ட யாக்கம், மக்கள் தோட்ட அபிவிருத்திக் கூட்டுத் தாபனம்,(ஜனவசம) மற்றும் எல்கடுவ பிளான்டேசன் முதலான பெருந்தோட்டங்கள் பலவற்றை, தனியாருக்கு வழங்க, அரச பொருளாதார முகாமைத்துவ குழு நடவடிக்கை எடுத்து வருகின்றது. இது ஆரோக்கியமான நிலையல்ல. எனவே, இதனை தடுத்து நிறுத்துவதற்காக, பல மட்டங்களிலும் எதிர்ப்பை வெளியிடவுள்ளோம்.
“97 வருடங்கள் பழைமையான எமது சங்கம், எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நூற்றாண்டு விழாவைக் கொண்டாடவுள்ளது. எனவே, எமது அமைப்பானது தொழிற் திணைக்களத்தைவிடவும் பழைமையானது. எமது சங்கம் நீண்ட வரலாற்றைக் கொண்டதால், எமது அங்கத்தவர்களது நலனை கருத்தில் கொண்டு, பல்வேறு தீர்மானங்களை எடுக்கும் கடப்பாடு எமக்கு உள்ளது.
“பெருந்தோட்டங்களில், தொழிலாளர் நலன் கருத்திற்கொள்ளப்படுவதில்லை. ஊழியர் சேமலாப நிதி தொடர்பாக, சரியான கணக்குப் பதிவுகள் இடம்பெறுவதில்லை. இதன் காரணமாக, சேவையிலிருந்து ஓய்வுபெறும் தொழிலாளர்கள், வெற்றுக் கையுடன் தமது இறுதிக் காலத்துக்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டு வருகின்றது. எனவே, தொழிலாளர் நலனுக்காக பல்வேறு தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது” என்றார்.
நன்றி- தமிழ் மிரர்

வடக்கு கிழக்கு வாழ் மலையக மக்கள் ஒன்றியம் மகஜர்

0
0
பாராளுமன்ற உறுப்பினா் சி.சிறிதரனின் கொடூர பிரதேசவாத சொற் பிரயோகங்களை வன்மையாக கண்டிப்பதோடு அவா் நாட்டில் வாழுகின்ற மலையக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என வடக்கு கிழக்கு வாழ் மலையக மக்கள் ஒன்றியம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்மந்தனிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனா்.

இன்று கிளிநொச்சிக்கு விஜயம்  செய்த  சம்மந்தனிடம் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் வைத்து இம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண முன்னாள் மாகாண சபை உறுப்பினரும்இ வடக்கு கிழக்கு வாழ் மலையக மக்கள் அமைப்பின் இணைப்பாளருமான எம்பி. நடராஜ் கையொப்பம் இட்டு இந்த மகஜர் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவதுகிளிநொச்சி மாவட்டத்தில்  மலையக வம்சாவழி மக்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனா். கடந்த தேர்தல்களில் பாராளுமன்ற உறுப்பினா் சி.சிறிதரன் இந்த மக்களின் அதிகளவாக வாக்குகளையும் பெற்றவா். எனவே இந்த நிலையில் அவா்  மலையக சமூகத்தை கொச்சைப்படுத்தும் வகையில் சொற் பிரயோகங்களை மேற்கொண்டிருப்பது நாடு முழுவது வாழும் மலையக மற்றும் இந்திய வம்சாவழி மக்களின் மனங்களை சிதறடித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினா் நேசிப்பதாக கூறும் அதே தமிழ்த்தேசியத்தை நாங்களும் நேசிக்கின்றோம். அதற்காக எண்ணற்ற உயிர்த்தியாகங்களை  செய்திருக்கின்றோம் அரை நூற்றாணடுகளுக்கு மேலாக வடக்கில் கிழக்கில் மலையக மக்கள் பரந்து வாழ்ந்து வருகின்றனா். ஆனால் இவா்கள் இன்றும் மாற்றான் தாய் மனப்பாங்குடன்தான்  நடத்தப்படுகின்றமை மிகுந்த மனவேதனையளிக்கிறது

எனவே மலையக மக்கள காயப்படுத்தும் வகையில்  பயன்படுத்தப்படும்  மோசமான சொற் பிரயோகங்களை உடனடியாக நிறுத்திக்கொள்ள  வேண்டும்  என்றும் கோரிக்கை விடுகின்றோம் எனவும் குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்வாய்ப்புகளை வழங்க நிர்வாகங்கள் முன்வர வேண்டும்

0
0
கூட்டொப்பந்தத்துக்கு அமைவாக, பெருந்தோட்டங்களில் படித்த இளைஞர், யுவதிகளுக்கு தாங்கள் வதியும் தோட்டங்களிலேயே தொழில் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். இளைஞர்களின் அபிலாஷைகளை பூர்த்திசெய்யும் நோக்குடன், தோட்டங்களை நிர்வகிக்கும் பணிகளில் அவர்களை இணைத்து, அவர்களது தகைமைக்கு ஏற்ப தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க, தோட்ட நிர்வாகங்கள் தயக்கம் காட்டக்கூடாது.  தொழில்வாய்ப்புகளை வழங்குவதற்கு, முன்வர வேண்டுமென்று, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்
“இரண்டு நூற்றாண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும்கூட, மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தலைமுறை, தலைமுறையாக தோட்டங்களை நம்பியே வாழ்ந்து வருகின்றார்கள். தோட்டங்களின் உயர்வுக்கும், வளர்ச்சிக்கும் பெரும்பங்காற்றி வரும் இவர்கள், தமது பிள்ளைகள் தம்மைப்போல அல்லாமல் தாம் வாழ்கின்ற தோட்டங்களிலேயே தமது பிள்ளைகளுக்கு அந்தஸ்துள்ள தொழிலைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் உள்ளார்கள்.
“தொழிலாளர்களது பிள்ளைகளுக்கு தோட்ட நிர்வாகங்கள், கட்டாயம் தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும். வெளிப்பிரதேசங்களைச் சேர்ந்தவர்களை தொழிலுக்கு அமர்த்தும் தோட்ட நிர்வாகங்களை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
“படித்த இளைஞர்,யுவதிகளுக்கு பெருந்தோட்டங்களிலேயே, அவர்களது தகைமைக்கு ஏற்பட்ட தொழில்வாய்ப்புகள் வழங்கப்படாமையால், இளைஞர்,யுவதிகள் நகர்புறங்களை நோக்கி செல்கின்றனர். நகர்புறங்களில் தொழில்புரிவோர், அன்றாட வீட்டுத் தேவைகளை கவனிக்க முடியாமலும், குறிப்பாக தமது வாழ்க்கையோடு ஒப்பிட்டும் அடையாள அட்டை பெறுவதிலும் வாக்காளர் பதிவு போன்ற விடயங்களில் தமக்குக் கிடைக்கும் வாய்ப்பைத் தவறவிடுகின்றார்கள். இது எதிர்கால சந்ததிக்கு ஆரோக்கியமான நிலையல்ல. எனவே, தோட்ட நிர்வாகங்கள் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்” என்று அவர் கூறினார்.
இந்த நிலைக்கு தோட்ட நிர்வாகங்களே பொறுப்புக்கூற வேண்டும். முகவரி இழந்த நிலைக்கு நம்மவர்கள் தள்ளப்படக் கூடாது. 22 தோட்டக் கம்பனிகளோடு கட்டம் கட்டமாக, பேச்சு வார்த்தை நடாத்தி வருகின்ற நிலையில் தோட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு தோட்டக் காரியாலயங்களில் எழுதுவினைஞர்களாக, தொழிற்சாலைகளில் மேற்பார்வையாளர்களாக, வெளிக்கள உத்தியோகஸ்தர்களாக பயிற்றுவித்து வேலைக்கு அமர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கனவே முன்வைத்திருந்தோம். இதன்படி தோட்ட நிர்வாகங்கள் கரிசனைக் கொண்டு தோட்டங்களிலே தொழில் பெற்றுக் கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் நிர்வாகங்களிலே தங்கியுள்ளது. இவர்களைத் தவிர்ந்த ஏனையவர்களுக்கு தகுதி அடிப்படையில் தொழில் வாய்ப்பினைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

தேயிலை உற்பத்திக்கு 150 வருடங்கள்

0
0
இலங்கையின் தேயிலை கைத்தொழிலுக்கு 150 வருடங்கள் நிறைவடைந்ததை குறிக்குமுகமாக உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் பல நிகழ்வுகள் இடம்பெற்றன. அத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களும், சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கும் இவ்விழாக்களில் முக்கிய இடம் கிடைக்கவில்லையென விமர்சனமும் எழுந்துள்ளது.
எமது தேயிலைத் தொழிற்துறைக்கு சிறு தேயிலை தோட்டங்களின் பங்களிப்பை நாம் குறைவாக எடைபோட முடியாது.
சிறிய தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர், இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் தேசபற்று விஜேரத்ன தேவ கெதர கூறுவது என்னவென்றால், சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களின் எண்ணிக்கை 2016ம் ஆண்டு 3,93,420 ஆகும். அவர்கள் 121.967 ஹெக்டயார் காணியில் தேயிலையைப் பயிரிட்டிருந்தார்கள். அவர்கள் 2016ம் ஆண்டு 21806 இலட்சம் கிலோ தேயிலையை உற்பத்திச் செய்திருந்தார்கள்.
அண்ணளவாக 25 இலட்சம் பேர் சிறிய தேயிலைத் தோட்டம் மூலம் வாழ்க்கை நடத்துகின்றார்கள். மொத்த தேயிலை உற்பத்தியில் 74.5 வீதம் 2016ம் ஆண்டு சிறிய தேயிலைத் தோட்ட பிரிவினருக்கே கிடைத்தது. 2016ம் ஆண்டு தேயிலை ஏற்றுமதி வருமானமாக 1269 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைத்தது. அதாவது 184777 மில்லியன் ரூபா கிடைத்தது. சிறிய தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகார சபை 1977ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 01ம் திகதி சிறுதேயிலைத் தோட்டங்களை அபிவிருத்தி செய்யவே ஆரம்பிக்கப்பட்டது.
சிறிய தேயிலை தோட்டங்களின் உற்பத்தியை அதிகரித்தல், வர்த்தக சந்தர்ப்பங்களை அதிகரித்தல், அத்துறையில் தொழில் ஈடுபட்டுள்ள மக்களின் சமூக நலங்களை வழங்குதல் என்பன அவ் அதிகார சபைக்கு வழங்கப்பட்ட பணிகளாகும்.
கிராமிய பொருளாதாரத்தை உறுதிப்படுத்தவும், வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதும் அரச கொள்கையின் முக்கிய இரு விடயங்களாகும். கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் சிறிய தோட்டங்களுக்கும், சிறிய இறப்பர் தோட்டங்களுக்கும் முக்கிய பங்குள்ளது.
தேயிலை உற்பத்தியாளர்களின் அசமந்தம்
சில கணக்கெடுப்புகள் மூலம் வெளிவந்த விடயம் என்னவென்றால் தேயிலை உற்பத்தி செய்யக் கூடிய காணிகள் அதிகமாக இருந்தும். அதற்காக முயற்சி செய்யும் உற்பத்தியாளர்கள் குறைவாகவே காணப்படுகின்றார்கள். ஆகவே அவர்கள் உற்பத்தியை மேற்கொள்ள அவர்களை ஊக்குவிக்க வேண்டிய நிலைமை தோன்றியுள்ளது.
கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக மாத்தறை, காலி, களுத்துறை, இரத்தினபுரி போன்ற மாவட்டங்களில் சிறிய தேயிலைத் தோட்டங்கள் பாதிப்புக்கு உள்ளாகின. இது தொடர்பாக ஆய்வுகள் நடத்திய தேயிலைத் தோட்ட அபிவிருத்திச் சபையின் கணக்கெடுப்பின்படி முற்றாக அழிவடைந்த காணிகளின் அளவு 658.14 ஹெக்டயராகும். இக் காணியின் உரிமையாளர்கள் 4053 பேராகும். அவர்கள் 07 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாகும்.
இவ்வாறு பாதிப்பு ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் அவர்கள் பெருமளவு பச்சை தேயிலைக் கொழுந்துகள் மூலம் உயிர் வருமானத்தை பெற்றுக் கொண்டிருந்தார்கள். தெற்கு மாகாணத்தில் 1 கிலோ பச்சைத் தேயிலை கொழுந்து 1 கிலோவுக்கு 100-110 ரூபா வரை கிடைத்ததாக அதிகார சபையின் தலைவர் கூறியுள்ளார். வருமானத்தை இழந்த தேயிலைக் காணி சொந்தக்காரர்களின் நிலைமையை மேம்படுத்துதற்காக அரைவாசி மற்றும் முற்றாக பாதிப்படைந்த காணிகளை புனர்நிர்மாணம் செய்ய வேண்டியுள்ளது.
அதற்காக உதவி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றது. முற்றாக பாதிப்படைந்த காணிகளின் மீண்டும் தேயிலையை நட 280.4 மில்லியன் ரூபாவும் அரை வாசி பாதிப்படைந்த காணிகளின் மீண்டும் தேயிலை நடுவதற்கு 111.66 மில்லியன் ரூபாவும் தேவையென கணக்கிடப்பட்டுள்ளது. மே மாதம் தொடக்கத்தில் தேயிலைக் கன்றுகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுமென கூறப்பட்டதோடு தனியார் துறையினரினது நாற்று மேடைகளிலும் தேயிலைக் கன்றுகளின் விலை அதிகரிக்குமென கூறப்பட்டது.
சந்தை குறித்த தவறான கருத்து
சிறிய தேயிலைத் தோட்ட அதிகார சபைக்குச் சொந்தமான களுத்துறை, கேகாலை, கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை போன்ற இடங்களிலுள்ள நாற்று மேடைகளில் தேவையான அளவு தேயிலைக் கன்றுகள் விநியோகிக்கப்படுவதாக தலைவர் கூறினார். மினவும் உயர் தரத்திலான தேயிலைக் கன்றொன்றை 25 ரூபா வீதம் தேயிலை மீள் நடுகைப் புரிபவர்கள் பெற்றுக் கொள்ள முடியும்.
சர்வதேச தேயிலைச் சந்தையில் இலங்கைத் தேயிலையின் தரம் குறைவடைந்து வருவதாகக் பிரசாரம் செய்யப்பட்டது. வியட்நாமில் தேயிலை உற்பத்தி விரைவாக முன்னேற்றம் அடைவதால் இலங்கையின் இடத்தை வியட்நாம் கைப்பற்றும் என எதிர்வு கூறப்பட்டது. ஆனால் இலங்கை தேயிலை என்றும் வர்த்தகப் பெயருக்குள்ள வணிக தரம் குறைவடையாது காணப்படுகின்றது. கொழும் தேயிலை ஏல விற்பனைக்கு முன்வைக்கப்படும் தேயிலையின் அளவு 7 மில்லியன் கிலோ அளவுக்கும் அதிகமாகவே உள்ளது. இவ் அளவானது சிறு தேயிலைத் தோட்ட காணி உரிமையாளர்களின் உற்பத்தி குறைவடைந்த போதெ காணப்பட்டுள்ளது.
தேயிலைத் தோட்டம் என 10 பர்சஸ் தொடக்கம் 10 ஏக்கர் வரையான காணிகளையே குறிப்பிடுகின்றார்கள். சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கான சங்கம் ஒன்றும் செயட்படுகின்றது. 2014 ல் 1383 ஆக காணப்பட்ட சங்க்களின் எண்ணிக்கை 2015ல் 1394 ஆகவும் 2016ல் 1407 ஆகவும் அதிகரித்தது. அதன் மூலம் தொழிலின் அபிவிருத்திக்கான ஒருங்கிணைந்த குரலும் எழுப்படுகின்றது. தேயிலைத் தொழிலின் இன்னுமொரு முக்கிய அம்சம் தேயிலைத் தொழிற்சாலைகளாகும். சிறிய தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகார சபைத் தலைவர் தேயிலைச் தொழிற்சாலைகளை நவீனமயப்படுத்த பெருந்தோட்டக் கைத்தொழில் துறை அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
ஜப்பானில் தேயிலைத் தொழிற்சாலை சூரிய சக்தி மூலம் இயக்கப்படுகின்றது. அதேபோல் எமது தொழிற்சாலைகளை நவீனப்படுத்த வேண்டுமென அவர் கூறினார். அதற்காக வெளிநாட்டு உதவிகளும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கையில் கோப்பிப் பயிர்ச் செய்கை அழிவடைந்த பின்னரே தேயிலை உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டது. 1880 ம் ஆண்டு கோப்பி களஞ்சியசாலைகள் தேயிலைத் தொழிற்சாலைகளாக மாற்றம் பெற்றன. பின்னர் இங்கிலாந்தின் மார்ஷல் நிறுவம் மற்றும் பர்மின்ஹாம் மற்றும் பெர்பர்ஸ்ட் நிறுவனமும் தேயிலை தொழிற்சாலைக்கான இயந்திரங்களை உற்பத்தி செய்து இலங்கைக்கு கப்பல் மூலம் கொண்டு வந்தார்கள். அதன் பின்னரே தேயிலைத் தொழிற்சாலை யுகம் ஆரம்பிக்கப்பட்டது.
அபிவிருத்திக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
தற்போது இலங்கையில் தேயிலைத் தொழிற்சாலை உரிமையாளர்களின் சங்க அங்கத்துவ தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 200க்கும் அதிகமாகும். பல தரத்திலான ஊழியர்கள் தேயிலை உற்பத்தியில் பங்குகொள்கின்றார்கள். முன்னர் நீராவி மூலம் இயந்திரங்கள் இயக்கப்பட்டாலும் தற்பொது மின்சாரம் மூலம் இயந்திரங்கள் இயக்கப்படுகின்றன.
சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களின் கொழுந்தை தொழிற்சாலைகளே கொள்வனவு செய்கின்றன.
சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களின் நிலைமையை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் பற்றிய விபரங்களை அனைத்து அதிகார சபை கிளை காரியாலயங்களிலும் பெற்றுக் கொள்ள முடியும். காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி, கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் பண்டாரவெல ஆகிய இடங்களில் காரியாலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்காரியாலயங்களை மேம்படுத்த 80 இலட்சம் ரூபாய் செலவிடப்படவுள்ளது. அதேபோல் மீண்டும் நடுகையை மேற்கொள்ள தேயிலைச் செடியை அகற்றுவோருக்கு சுயதொழில் மூலம் வருமானத்தைப் பெற திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது.
திட்ட அதிகாரிகள் சேவையும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அதன் மூலம் சிறு தேயிலைத் தோட்ட செய்கையில் ஈடுபடுபவர்களு தேயிலைன ஆலோசனைகள் வழங்கப்படும். மண்சரிவுக்குள்ளான காணிகளுக்குப் பதிலாக வேற்று காணிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதேபோல் அரசாங்கம் காணிகள் தொடர்பாக புதிய கொள்கையொன்றையும் பின்பற்றவுள்ளது. அதன் மூலம் மக்கள் முகங்கொடுக்கும் காணிப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் இதன் மூலம் சிறு தேயிலைத் தோட்டங்களின் அதிகரிப்பும் நிகழுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
கருணாரத்ன அமரதுங்க
தமிழில்: வீ. ஆர். வயலட்

நன்றி- தினகரன்

வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்காக அணிதிரள வேண்டும்

0
0
காலத்துக்கு ஏற்றவகையில், பெருந்தோட்டத் தொழிற்றுறையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும். அவ்வாறு மாற்றங்கள் கொண்டுவரப்படும் பட்சத்திலேயே, தோட்டத் தொழிலாளர்கள், தோட்ட சேவையாளர்கள் கவனத்தோடும், கரிசனையோடும் தொழில் செய்யக் கூடிய வாய்ப்புகள் ஏற்படும்'என்று, பெருந்தோட்ட சேவையாளர் காங்கிரசின் பொதுச் செயலாளரும், சடடத்தரணியுமான கா.மாரிமுத்து தெரிவித்துள்ளார்.
'எனினும், பெருந்தோட்ட சேவையாளர்களுக்கு அந்த வாய்ப்பு இன்னும் சரியாக அமையவில்லை. அதனை பெற்றுக்கொள்வதற்கான தகுதியை அமைத்துக்கொள்வதற்காக, அத்துறை சார்ந்தவர்கள், ஓரணியின் கீழ் அணித்திரள வேண்டும்'என்றும், அவர் கூறினார்.
பெருந்தோட்ட சேவையாளர் காங்கிரஸின் நிறைவேற்றுக்குழு கூட்டம், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான செளிமிய பவனில், நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார். இங்கு மேலும் கூறிய அவர்,
'இன்று, பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு, பயிற்சிகள் பயிற்சியுடனான கூடிய சம்பள அதிகரிப்பு, கௌரவமான தொழில்போக்கும் பதவி உயர்வும் கிடைக்கின்றன. ஆனால், பெருந்தோட்ட சேவையாளர்களுக்கு ஒருவித வாய்ப்புகளும் வழங்கப்படவில்லை என்பது அவர்களிடம் இருந்து வரும் குற்றச்சாட்டுகளுக்கூடாக நிரூபணமாகின்றது.
'தோட்ட சேவையாளர் துறையில் புதியவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவதில்லை. மாறாக குறைந்த சம்பளத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஓய்வுபெற்றவர்களே கடமைக்கு அமர்த்துவதும் அவர்களிடமிருந்து கூடுதலான கடமைகளைப் பெற்றுக்கொள்வதும் இயல்பாகிவிட்டது.
தோட்ட சேவையாளர்கள் ஓய்வுபெறுகின்றபோது, அவர்களுக்குரிய சேவைக் கொடுப்பனவுகளை கொடுத்து முடிப்பதற்கு முன்பதாகவே, அவர்கள் வாழ்ந்த விடுதிகள் மீள கோரப்படுகின்றன. அதனை உரிய நேரத்தில் கொடுக்காவிட்டால, சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதும் சாதாரணமாகி விடுகின்றது. இது இவர்களுக்கு செய்யப்படும் பெரும் அநீதியாகும்.
மேலும், புதிதாக இணைத்துக் கொள்ளப்படுபவர்கள், வெறுமனே நாள் சம்பளத்துக்கே நியமனம் பெறுகின்றார்கள். இது கண்டித்தக்க ஒன்றாகும்.
கூட்டொப்பந்த அடிப்படையில் இவர்களுக்கும் ஏனையவர்களுக்கும் நிரந்தரமான சம்பளம் வழங்கப்படுவதுடன், அனைத்து சலுகைகளும் வழங்கப்பட வேண்டும். தோட்டச் சேவையாளர்களை தோட்ட நிர்வாகங்கள் திடீர் திடீரென இடமாற்றம் செய்கின்றன. இதனை எம்மால் அனுமதிக்க முடியாது. அவர்கள் தொடர்ச்சியாக 5 வருடங்கள் தாம் வதியும் தோட்டத்தில் சேவை செய்தப் பின்னரே, வேறொரு இடத்துக்கு மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.
ஆகவே, தோட்ட சேவையாளர்கள் தமக்கான உரிமைகளை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின், அங்கிகரிக்கப்பட்ட சேவையாளர்களாக தொடர்ந்து செயற்பட அனைவரும் காலம் தாழ்த்தாது பெருந்தோட்ட சேவையாளர் காங்கிரஸில் ஒன்றிணைவது அவசியமானது.
பெருந்தோட்ட சேவையாளார் காங்கிரஸ், சக்தி வாய்ந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸூடன் இணைந்த தொழிற்சங்கமாகும். அப்போதுதான், தோட்ட சேவையாளர்களுக்கான உரிய உரிமைகளையும், சலுகைகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.
இல்லையேல் தொடர்ந்தும் தோட்ட நிர்வாகத்தின் அடக்கு முறைக்கு செவிசாய்க்கும் நிலைமை தோன்றிவிடும்'என்றார்.

20 ஆண்டுகால பதவியில் இருந்த முதல்வருக்கு சொந்த வீடில்லை

0
0
இந்தியாவின் திரிபுரா மாநில முதல்வராக கடந்த 20 ஆண்டுகளாக பதவியில் இருந்த மாணிக் சர்க்கார் தனக்கென சொந்த வீடு இல்லாததால் மனைவியுடன் கட்சி அலுவலகத்தில் தங்கியுள்ளார்.

திரிபுராவில் 20 ஆண்டுகளாக முதல்வராக இருந்த மாணிக் சர்க்கார் சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் ஆட்சியை இழந்தார்.

திரிபுராவில் 25 ஆண்டு காலமாக நீடித்த மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆட்சியை பாரதிய ஜனதாக் கட்சி முடிவிற்குக் கொண்டு வந்துள்ளது.

இந்தியாவின் எளிமையான முதல்வர் என அழைக்கப்பட்ட மாணிக் சர்க்கார் இம்முறை சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தார்.

இவ்வளவு காலம் பதவியில் இருந்தாலும் அவருக்கென சொந்த வீடொன்று இல்லை. தனக்குக் கிடைத்த பணத்தையும் கட்சிக்கு ஒப்படைத்து விட்டார். மனைவியின் வருமானத்தில் தான் அவரது குடும்பம் இருந்தது.

இந்நிலையில், 5 ஆவது முறையாக அரியணையில் ஏறும் வாய்ப்பை இழந்த மாணிக் சர்க்கார் முதல்வருக்கான வீட்டில் இருந்து வெளியேறினார்.

சொந்தமாக வீடு இல்லாததால் அவர் மனைவி பாஞ்சாலியுடன் கட்சி அலுவலகத்தில் தங்கியுள்ளார்.

உறவினர்கள் வீடு இருந்தும் அவர் அங்கு செல்லாமல் கட்சி அலுவலகத்திற்கு சென்று விட்டார். மேலும், அவர் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான விடுதியில் தங்கவும் விரும்பவில்லை.

மாணிக் சர்க்கார் தற்போது குடியேறிய கட்சி அலுவலகத்தில் இரண்டு அறைகளுடன் குறைந்தளவான வசதிகளே உள்ளன.

தனது பங்களிப்பு கட்சியோடு இருக்க வேண்டும் என்பதற்காக கட்சி அலுவலகத்திலேயே அவர் தங்கிவிட்டதாகவும் தமது கட்சியின் தலைவர்களில் பெரும்பாலானவர்கள் எளிமையான வாழ்க்கை வாழ்பவர்கள் தான் எனவும் திரிபுரா மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பஜன்கர் தெரிவித்துள்ளார்.

65 வயதான சர்க்கார் தனக்கு சொந்தமான பூர்வீக சொத்தை தங்கைக்கு தானமாகக் கொடுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி- பி.பி.சி தமிழ்

தனிப்பட்ட பிரச்சினை இனவாத பிரச்சினையாக மாற்றப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது

0
0
கண்டி, திகன பகுதியில் இடம்பெற்ற ஒரு தனிப்பட்ட பிரச்சினை இனவாத பிரச்சினையாக மாற்றப்பட்டிருப்பதானது மிகவும் கண்டிக்கத்தக்கதொரு சம்பவமாகவே அமைந்துள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பா.உ இந்த அசம்பாவிதங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் கடந்த வருடங்களையும் இந்த வருடத்தின் இதுவரையான காலகட்டத்தையும் ஆராய்ந்து பார்க்கின்றபோது, மார்ச் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் எமது நாட்டில் இனங்களுக்கிடையிலான மோதல்கள் சில தீய சக்திகளால் திட்மிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களும் அண்மையில் கூறியிருந்தார்.

கடந்த காலங்களைப் பொறுத்தவரையில் எமது சகோதர மக்களாகிய முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைத் தாக்குதல்; சம்பவங்கள் தொடர்ந்து நடாத்தப்பட்டு வந்துள்ளன. தம்புள்ளையிலிருந்து மாவனல்லை, காலி ஜிந்தோட்டை, களுத்துறை, கொழும்பு, குருனாகலை என அது தொடர்ந்து அண்மையில் அம்பாறை, இப்போது திகன என மேலும் தொடரும் நிலைமைகளையே காணக்கூடியதாக இருக்கின்றது.

அம்பாறையில் இடம்பெற்ற சம்பவங்களின் சூடு தணியும் முன்பதாகவே திகன சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி இடம்பெற்றிருந்த ஒரு சம்பவத்தின் பின்னணியாகவே இந்த  வன்முறைகள் இடம்பெற்றிருக்கின்றன. இச் சம்பவத்தினை ஆராய்கின்றபோது, இது முழுமனே முஸ்லிம் மக்களின் சொத்துக்களை அழிப்பதற்காகவே மேற்கொள்ளப்பட்ட செயற்பாடாகவே விளங்குகின்றது.

மேற்படி சம்பவத்தின்போது பொலிஸார் தங்களால் இயன்றளவில் தங்களது கடமைகளை நிறைவேற்றியதாகவே தெரிய வருகின்றது. என்றாலும், பொலிஸாரையும் மீறிய நிலையிலேயே முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊரடங்கு அமுலில் இருந்த போதிலும் நகர்ப் பகுதிகள் தவிர்ந்த ஏனைய உட்புற குடியிருப்புப் பகுதிகள் மீது தாக்குதல்கள் இடம் பெற்றுள்ளதாக தெரியவருகிறது. 

ஒரு தனிப்பட்ட பிரச்சினையானது இனவாத பிரச்சினையாக மாற்றப்பட்டிருப்பதை இங்கு சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது. எனவே, இத்தகைய சம்பவங்கள் இடம்பெறாமல் தவிர்ப்பதற்கான காரணிகள் குறித்தும் ஆராய வேண்டியுள்ளது.

அதே நேரம், இத்தகைய செயற்பாடுகள் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் நான் இங்கே சுட்டிக்காட்ட வேண்டும். அதாவது, ஏதாவதொரு சம்பவம் இடம்பெறும் வரையில் பார்த்திருந்து, அல்லது வேண்டுமென்றே ஒரு சம்பவத்தை உருவாக்கி, அதிலிருந்து ஆரம்பித்து இத்தகைய வன்முறைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதையும் அவதானிக்க முடிகின்றது.

குறிப்பாக, நான் இந்த சபையிலே ஒரு விடயத்தைக் கூற வேண்டும். அதாவது, தமிழ் - சிங்களப் புத்தாண்டு அண்மிக்கின்ற காலப்பகுதிகளில் முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்களில் சிங்கள மக்கள் பொருட்கள் - குறிப்பாக ஆடைகள் வாங்கக்கூடாது என பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவது ஒரு வழமையாகி வருகின்றது. இதன் பின்னணியில் ஒரு சில சுயலாப வர்த்தகர்களே இருக்கின்றனர் அன்றி, இதன் பின்னணியில் வேறு ஒன்றும் கிடையாது.

அந்த வகையில்தான் மேற்படி சம்பவங்களையும் பார்க்க வேண்டியுள்ளது. இந்த வருட தமிழ் - சிங்களப் புத்தாண்டு அண்மித்து வருகின்ற காலகட்டத்திலேயே மேற்படிச் சம்பவங்களும் இடம் பெற்றுள்ளன. அதாவது முஸ்லிம் மக்களது வர்த்தக நிலையங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.

இன்றைய காலகட்டத்ததைப் பொறுத்தவரையில் தமிழ், முஸ்லிம் மக்களில் பலரும் அரச தொழில்வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர். கடந்தகால யுத்தம் இதற்கொரு காரணமாகலாம். இவ்வாறு அரச தொழில்வாய்ப்புகள் மறுக்கப்படுகின்ற மக்கள் வர்த்தகங்களில் ஈடுபடுகின்றபோது, அதனையும் தாக்கி அழிக்க முற்பட்டால் அந்த மக்கள் தங்களது வாழ்வாதாரங்களுக்காக வேறு என்ன செய்வார்கள்? என்பதை நாங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

எனவே, தங்களது சுயலாபங்களுக்கு இனவாதத்தினை பூசிக் கொண்டு, இந்த நாட்டை பின்தள்ளிச் செல்லாது எல்லோரும் இணைந்து இந்த நாட்டினை முன்னேற்றவே முன்வர வேண்டும்.

எம்மால் எல்லாற்றையும் செய்தும் இந்த இனவாதத்தினை ஒழிக்க முடியாவிட்டால் ஒருபோதும் முன்னேற முடியாது என்பதை நான் இந்தச் சபையிலே வலியுறுத்த விரும்புகின்றேன். எனவே, தயவு செய்து எவராக இருந்தாலும் இனவாதத்தைப் பூசிக் கொண்டு திரியாதீர்கள். மனித நேயத்துடன் வாழ்ந்து பார்க்க முன்வாருங்கள் என அழைப்பு விடுகின்றேன்.

தீவிரமும், அதிதீவிரமும் எமது மக்களை அவலங்களுக்குள் தள்ளிவிடும்- டக்ளஸ் தேவானந்தா

0
0
கேள்வி:- நடந்து முடிந்த உள்ளுராட்சித் தேர்தலில் ஈ.பி.டி.பி யின் வெற்றியை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

பதில் :-நடந்துமுடிந்த உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஈ.பி.டி.பி க்கு கூடுதல் உறுப்பினர்கள் கிடைக்கப் பெற்றிருப்பதையும், வாக்குவங்கி அதிகரித்திருப்பதையும் கருத்திற்கொண்டு அதனை பாரிய வெற்றியாக சக கட்சிகளும் ஏனையவர்களும் கருதினாலும், என்னைப் பொறுத்தவரையில் நாம் முன்னெடுத்த சேவைகளுக்கு எமக்கான வாக்குகள் பல மடங்காக அதிகரி;த்திருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். 
எனவே நான் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்பதே எனது நிலைப்பாடாகும். ஏனைய கட்சிகள் மக்களுக்கு எதனையும் இதுவரை செய்யவில்லை. நாமோ எமக்கு கிடைக்கப்பெற்ற அரசியல் அதிகாரங்களுக்கேற்ப பல மடங்கு சேவைகளை செய்திருக்கின்றோம். அதை மக்கள் உணரத் தொடங்கியிருக்கின்றார்கள். நாம் முன்னெடுக்கும் சரியான திசைவழி நோக்கி மக்கள் அணிதிரண்டு வருவதற்குத் தயாராகி விட்டார்கள் என்பதை சமகால தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. அரசியல் ரீதியாக நாம் எதிர்பார்க்கும் பலம் என்பது மக்களுக்கான பலமாகவே அமையும். ஈ.பி.டி.பி யின் வெற்றி மக்களின் வெற்றியாக அமைய வேண்டும் என்று நாம் விரும்புகின்றோம்.

கேள்வி:- வடக்கின் ஓரிரு சபைகளைத் தவிர எந்தவொரு சபையிலும் எந்தவொரு கட்சியும் ஆட்சியமைக்க முடியாத நிலையில் அந்ததந்த சபைகளில் பெரும்பான்மை பெற்ற கட்சிகள் ஈ.பிடி.பி உடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனவா? அது குறித்து இணக்கப்பாடெதுவும் எட்டப்பட்டதா?

பதில் :-இதுவரை உத்தியோகபூர்வமான பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை. உத்தியோகப்பற்றற்ற வகையான பேச்சு வார்த்தைகளே  தொடர்கின்றன. இந்த நிலையில் முடிவுகளாக எவையும் எடுக்கப்படவில்லை. சக கட்சிகளுக்கு அரசியல் அதிகாரங்களை மக்களுக்காக பயன்படுத்த வேண்டும் என்ற விருப்பமோ, அக்கறையோ இருப்பதாகத் தெரியவில்லை. சபைகளைப் பொறுப்பேற்று நடத்துவதற்கு தேவையான புறச்சூழலை ஏற்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்காமல் இருப்பதானது ‘ஆடத்தெரியாதவனுக்கு மேடை சரியில்லையாம்’ என்ற கதையாகவே இருக்கப் போகின்றது. 

கேள்வி :- அதிதீவிரம் பேசும் சக்திகளுக்கான ஆதரவு, நடந்து முடிந்த உள்ளராட்சிசபைத் தேர்தல்களில் வடக்கில், பெருமளவு அதிகரித்திருப்பது எதனை காட்டுகிறது? மீண்டும் இவ்வாறான ஆதரவு வடக்கில் அதிகரித்ததிருப்பதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

பதில் :- தீவிரமோ, அதிதீவிரமோ எதை பேசினாலும் அது போலித்தனமானதாகும். எந்தத் தரப்பு அவ்வாறு பேசினாலும் அது எமது மக்களை அழிவுக்குள்ளும், அவலங்களுக்குமே தள்ளிவிடுமே தவிர எமது மக்களை பாதுகாப்பதற்காகவோ, அவர்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகள், அபிவிருத்திப் பிரச்சினைகள் போன்றவற்றுக்கு கௌரவமான தீர்வை பெற்றுத்தரவோ உதவாது. இதுவே கடந்த காலத்திலும் நடந்து முடிந்துள்ளது. 

தீவிரமோ அதிதீவிரவாதமோ பேசி உணர்ச்சியூட்டுவது வாக்குகளை அபகரிக்கவே தவிர, மக்களுக்கு சேவை செய்வதற்கல்ல. இந்த பிற்போக்குத்தனத்தை தமிழ் தலைவர்கள் என்று கூறப்படும் சேர்.பொன் இராமநாதன், தொடக்கம் ஜி.ஜி. பொன்னம்பலம், தந்தை செல்வநாயகம், அண்ணன் அமிர்தலிங்கம், பின்னர் பிரபாகரன் இப்போது சம்பந்தன் வரை. நீங்கள் குறிப்பிட்டது போன்று தீவிரத்தையும், அதிதீவிரத்தையும் பேசி மக்களை உணர்ச்சியூட்டி வாக்குகளை அபகரிக்கவும், அழிவுக்குள் தள்ளிவிடவுமே முனைந்திருக்கிறார்களே தவிர தாம் முன்வைத்த கோரிக்கைகளை அவர்களால் மக்களுக்கு வென்று கொடுக்க முடியவில்லை. அதற்குக் காரணம் தாம் முன்வைத்த கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும் என்ற நம்பிக்கை அந்த தலைவர்களிடத்திலேயே இருக்கவில்லை. அதற்காக அவர்கள் நடைமுறைச் சாத்தியமான தன்மையுடன் உழைக்கவில்லை. அதை வென்றெடுக்கும் பொறிமுறையை ஏற்படுத்த அவர்கள் தயாராகவும் இருக்கவில்லை. இவ்வாறு நான் கூறுவது அவர்கள் மீதான காழ்ப்புணர்ச்சியாலோ, அவர்கள் வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் என்பதாலோ அல்ல. 15 வருடங்களுக்கு மேலாக ஆயுதப் போராட்ட வழிமுறையிலும், 30 வருடத்திற்கு மேலான தேசிய அரசியல் நீரோட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் வழிமுறையூடாகவும் நான் பெற்றுக்கொண்ட அனுபவத்தில் இருந்தே இந்த விமர்சனங்களை முன்வைக்கிறேன். 

எமது மக்களின் கோரிக்கைகள் நியாயமானவை. ஆனால் அது வென்றெடுக்கப்படாமல் இருப்பதற்கு தனியே இலங்கை அரசையோ, இந்திய அரசையோ மட்டும் தவறென்று கூறிவிட முடியாது. தமிழ் தலைமைகள் என்றிருந்தவர்களின் அணுகுமுறை தவறுகளும், சுயலாப அரசியல் போக்குகளும் காரணங்களாக இருந்திருக்கின்றன என்பதையும் நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

கேள்வி:- புதிய அமைச்சரவையில் உங்கள் பெயரும் இடம்பெறுவதாக பேச்சுகள் அடிபட்டன. 2015ம் ஆண்டில் புதிய அரசு பொறுப்பேற்றது முதல் இவ்வாறான செய்திகள் வந்தவண்ணம் உள்ளன?

கடந்த காலங்களில் நாம் மத்திய அமைச்சரவையில் பங்கொடுத்து எமது மக்களின் பட்டினி சாவிலிருந்து காப்பாற்றியிருக்கின்றேன். யுத்தத்தினால் அழிந்து நொறுங்கி கிடந்த எமது தாயக பிரதேசத்தை மீண்டும் அபிவிருத்தியால் தூக்கி நிறுத்தியிருக்கின்றேன். உட்கட்டமைப்புக்களை கடுமையான முயற்சிகளால் மீள் கட்டமைப்பு செய்திருக்கின்றேன். ஒரு இயல்பான சூழலில் எமது மக்கள் வாழ வேண்டும் என்பதற்காக நேரகாலம் பாராது கடுமையாக உழைத்திருக்கின்றேன். நான் செய்ததைப் போன்று எந்த தமிழ் அரசியல் தலைமைகளும் மக்கள் சேவைகள் செய்தது கிடையாது. ஆனாலும் இன்னும் செய்து முடிக்க வேண்டிய பணிகள் ஏராளம் இருக்கின்றன என்பதையும் நானறிவேன்.  ஒருவேளை ஆட்சியில் நான் தொடர்ந்து இருந்திருந்தால் மிச்ச பணிகளையும் செய்து முடித்திருப்பேன். வேலை வாய்ப்புக்களுக்காக காத்திருக்கும் எமது இளைஞர் யுவதிகளுக்கு அதைப் பெற்றுக்கொடுக்கவும் உழைத்திருப்பேன். 

யுத்தத்தை நடத்திய அரசுகளுடனும், யுத்தத்தை வெற்றிகொண்ட அரசுகளுடனும் இணக்க அரசியல் நடத்தி என்னால் இவ்வளவு செய்து முடிக்க முடிந்தது. யுத்தத்துக்கு முகம் கொடுக்காத இந்த அரசிடமிருந்து இன்னும் அதிகமான பலாபலன்களை எமது மக்களுக்கு பெற்றுக்கொடுத்திருக்க முடியும். துரதிஷ்டவசமாக நான் தொடர்ந்து ஆட்சியில் பங்கெடுக்க முடியவில்லை. இவ்வாறான எனது சேவைகைளை எதிர்பார்த்திருக்கும் மக்கள் நான் அமைச்சரவையில் பங்கெடுக்க வேண்டுமென விரும்புவதாலும், அவ்வாறு எதிர்பார்ப்பதாலும் தென்னிலங்கையில் அரசியல் பரபரப்பு தலைதூக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தி;லும் எனக்கும் அமைச்சுப்பதவி கிடைக்கும் என்ற விருப்பத்தை முன்வைக்கிறார்கள்.. அதவே அடிக்கடி நான் அமைச்சுப்பதவி பெற்றுக்கொள்ள போவதாக செய்திகளாக வெளிவருகின்றன என நினைக்கின்றேன் 

கேள்வி:- உள்ளுராட்சித் தேர்தல்களையடுத்து தெற்கில் ஏற்பட்ட அரசியல் தளம்பல் நிலை, வடக்கின் அரசியலிலும் பாதிப்பினை ஏற்படுத்தியிருக்கின்றதா?

பதில் :-தெற்கில் இனவாத முன்னெடுப்புக்கள் தலைதூக்கி இருப்பதற்கு பிரதான காரணங்களில் ஒன்று வடக்கு கிழக்கில் தலைதூக்கிய அதாவது நீங்கள் ஏற்கனவே குறிப்பிட்ட தீவிரவாத மற்றும் அதிதீவிரவாத போக்குகள்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. அங்கே ஒருமித்து வெளிப்பட்டிருக்கும் தன்மையானது வட இலங்கையில் இரண்டாக பிரிந்து காணப்படுகின்றது.
தெற்காக இருந்தாலும்,வடக்காக இருந்தாலும் இனவாதமோ, தீவிரவாதமோ வாக்குகளை அபகரிக்க உதவலாமே தவிர மக்களுக்கு பயன்தரக்கூடியதாக ஒருபோதும் மாறப்போவதில்லை.

(11-03-2018 அன்று தினகரன் வாரமஞ்சரிக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவாமனந்தா வழங்கிய செவ்வி) 

தினகரன்-     வாசுகி சிவக்குமார்     

இடி தாக்கிய இருவர் வைத்தியசாலை தீவிர சிகிச்சை பிரிவில்- லயன் குடியிருப்பு இடிந்து விழுந்ததில் 34 குடும்பங்களின்100 மேற்பட்டோர் பாதிப்பு

0
0
ஹட்டன் - டிக்கோயா தரவலை தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் இருவர் மீது மின்னல் தாக்கியதில் குறித்த இருவரும் படுகாயமடைந்துள்ளனர்

26-04-2018 மதியம் 3.00 மணியளவில் பெய்த இடியுடன் கூடிய மழையின் மின்னல் தாக்கியதில் பாதிக்கப்பட்ட இருவருக்கு டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்



ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா தரவாலை மேற்பிரிவு தோட்டத்தில் 25-04-2018 புதன் கிழமை இரவு பெய்த கடும் மழையின் காரணமாக 24 வீடுகள் கொண்ட லயன் குடியிருப்பு இடிந்து விழுந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர் . 

குறித்த தோட்டத்தில் லயன் குடியிருப்பு இதற்கு முன்பு இடிந்து விழும் அபாயத்தில் காணபட்டதால் தோட்ட நிர்வாகத்திடம் பலமுறை அறிவித்துள்ள போதிலும் தோட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். 

டிக்கோயா தரவாலை மேற்பிரிவு தோட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள லயன் குடியிருப்பின் இரண்டு பக்கங்களிலும் வீடுகளின் கூரைகள் மற்றும் சுவர்கள் இடிபாடுகளுக்கு உள்ளாகியது. 

ஒரு வீட்டில் உறங்கி கொண்டிருந்த ஒருவரின் மீது சுவர்கள் இடிந்து விழுந்ததில் அவர் காயங்களுக்குள்ளாகி டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் அதே குடியிருப்பில் தற்காலிகமாக தங்கியிருப்பதுடன் பாதிக்கபட்ட மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்கவைப்பதற்கான நடவடிக்கையை ஹட்டன் பொலிஸார் மற்றும் பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர் மேற்கொண்டு வருகின்றனர். 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

கிளைபோசெட் பாவனைத் தடை நீக்கம்

0
0
தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த, கிளைபோசெட் பாவனைத் தடை நீக்கப்பட்டுள்ளதாக, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர்  நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பில் அடுத்த வாரமளவில் அமைச்சரவை அனுமதியை பெற்றுக்கொள்ள எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும் ஏனைய விவசாய உற்பத்திகளுக்கான, கிளைபோசெட் பாவனைத் தடை தொடருமெனவும் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்

கிளைப்போசைட்டின் செறிவு தேயிலையில் அதிகம்
விவசாயப் பொருட்களில், தேயிலையிலேயே கிளைப்போசைட்டின் செறிவு அதிகளவில் காணப்படுவதாக அமெரிக்காவின் உயர் பல்கலைக்கழகம் ஒன்றின் சமீபத்திய ஆய்வில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின்,சுகாதார தொழில் மற்றும் அறிவியலுக்கான மொரொக்சி கல்லூரியினால் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
கிளைப்போசைட் களைக்கொல்லியாக உலகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் அமெரிக்காவின் பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ள ஆய்வில், தேயிலை,தேயிலை பை,கோப்பி,தேன் ஆகியப் பொருட்களில் கிளைப்போசைட் செறிவு அதிகளவில் காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

ஓய்வூதிய பணத்தை முறையாக பெற உதவ வேண்டும்

0
0
தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களின் ஓய்வூதிய பணத்தை, முறையாக பெற்றுக்கொள்ள முழுமனதுடன் தொழிலாளர்களுக்கு உதவ முன்வரவேண்டும் என, இலங்கையின்  மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் மீறல்களுக்கான, நுவரெலியா மாவட்ட செயலணி படையின் இணை செயலாளர் வி.யோகேஷ்வரன்  நுவரெலியா பொலிஸ் வீதியில் அமைந்துள்ள செயலணிபடை காரியாலயத்தில் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கையிலேயேதெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, “நுவரெலியா மாவட்டத்தின் பெருந்தோட்டப் பகுதிகளில், 55 தொடக்கம் 60 வயதை பூர்தியாக்கி, தோட்ட நிர்வாகத்தின் ஊடாக தொழில் விலக்கப்பட்ட தொழிலாளர்கள், அவர்கள் சேவைசெய்த காலப்பகுதியில் பிடிக்கப்பட்ட ஊழியர் சேமலாப நிதி (ஈ.பி.எப்) மற்றும் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதி (ஈ.டி.எப்) ஆகியவற்றைப் பெற்றுகொள்வதில், பல்வேறு சிறமங்களை அனுபவித்து வருகின்றனர்.
“இந்த நிலையில், தோட்டத்தில் தொழில் புரியும் வயதெல்லயை அடைந்த உடன், தொழில் நீக்கம் செய்ய, சட்ட ரீதியாக தோட்ட நிர்வாகங்களுக்கு முடியும் என்றால், தோட்ட நிர்வாகங்களின் நடவடிக்கைகளுடன் ஏன் தொழிலாளர்களின் கொடுப்பனவுகளை முறையாக பெற்றுக்கொள்ள தொழிலாளர்களுக்கு உதவ முடியாது” என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்தும், “இந்த பிரச்சினை  நமது நாட்டிலுள்ள அனைத்து பெருந்தோட்டப் பகுதிகளிலும் காணப்படுவதுடன், நுவரெலியா மாவட்டத்தில் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
“இது தொடர்பாக, நுவரெலியா பிரதேச தோட்டப்பகுதிகள் பலவற்றில் இருந்து, எமது செயலணி படைக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இவ்விடயம் தொடர்பில், தோட்ட நிர்வாகங்களை ஆராய்ந்த பொழுது, தொழிலாளர்கள் ஓய்வூதிய பணத்தை தொழில் திணைக்களத்துடன், மத்திய வங்கியில் பெற்றுக்கொள்ள, உரிய ஆவணங்களை வழங்க, தோட்ட நிர்வாகங்கள் முறையாக செயற்படுவதில்லை என்பது, ஆரம்பக்கட்டத்தில் தெரியவந்தது.
“இதன் பின், தோட்ட நிர்வாகங்கள் பெருந்தோட்ட கம்பனிகளின் கீழ் இயங்குவதால், தோட்ட காரியாலயங்களில் ஓய்வூதியம் தொடர்பில் செயலாற்ற உத்தியோகஸ்தர்களும், அதற்கான தனி பிரிவு ஒன்று இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
“இதை விட தொழில் திணைக்களத்திற்குச் சென்று, தொழிலாளி ஒருவர் ஓய்வூதிய கொடுப்பனவை பெற்றுக்கொள்ளும் விண்ணப்ப படிவத்தைப் பெற்று, பின் அதனை முறையாக நிரப்புவதற்கு, தோட்ட காரியாலயத்துக்குச் சென்றால், ‘இன்று போய் நாளை வா’ என்ற விநாயகர் வேதம் ஓதப்படுகின்றது.
“இவ்வாறாக அழைக்களிக்கப்படும் தொழிலாளர்கள், கடைசி காலத்தில் தம் உழைப்பால் சேமித்த பணத்தை, அனுபவிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
“இந்நிலையில், தொழிலாளிகளான தனி மனிதர்களின் அடிப்படை மற்றும் மனித உரிமை மீறலில் தோட்ட நிர்வாகங்கள் ஈடுப்படுகின்றமை தெளிவாகியுள்ளது. இது தொடர்பாக தோட்ட அதிகாரிகளிடம் மனித உரிமைகள் மீறல் செயலணி படை செயலாளர் என்ற ரீதியில் கேட்டபொழுது, நடவடிக்கைகளை எடுப்பதாக தெரிவிக்கின்ற போதிலும், நடவடிக்கை எடுப்பதற்கான முன்னேற்றங்கள் எதுவும் காணவில்லை.
“எனவே, கொழும்பிலுள்ள தலைமை தொழில் திணைக்களத்தின், நுவரெலியா மாவட்டத்துக்குப் பொறுப்பான, தொழில் ஆணையாளரிடம் நேரடியாகச் சென்று, தோட்டநிர்வாகங்களின் செயற்பாட்டை எடுத்துரைக்கப்பட்டது.
“தொழிலாளர்களின் ஓய்வூதிய விடயத்தில், தோட்ட நிர்வாகங்கள் முறையாக செயல்பட, சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிராந்திய ரீதியான தொழில் திணைக்களத்துடன் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இந்த உறுதி மொழி மீறும் பட்சத்தில் குறிப்பிட்ட காலப்பகுதிக்கு பின், எமது செயலணிபடை, இலங்கை மனித உரிமைகள் அமைப்புடன் பாரிய நடவடிக்கை ஒன்றை எடுக்க தயாராகிவருகிறது” என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, தரகர்கள் ஊடாக, கூடுதலான பணத்தை செலவு செய்து, ஓய்வூதிய பணத்தை பெற தொழிலாளர்கள் முயற்சிக்க, தோட்ட நிர்வாகங்கள் இடம்வழங்காது, தொழிலாளர்களுக்கு இந்த விடயத்தில் உதவ முன்வரவேண்டும் எனவும், அவர் இதன்போது கேட்டுக்கொண்டார்.

மருந்தகங்களை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை

0
0
பெருந்தோட்டப் பகுதிகளில் காணப்படுகின்ற 'டிஸ்பென்சரி'எனப்படுகின்ற தோட்ட மருந்தகங்களை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தோட்ட முகாமைத்துவத்தின் கீழ் செயற்படுத்தப்பட்டு வரும் சுமார் 450 தோட்ட மருந்தகங்களை விருத்தி செய்வதன் ஊடாக தோட்டப்புற மக்களின் சுகாதார நிலைமையினை கட்டியெழுப்புவதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதனடிப்படையில், நாட்டின் எனைய பகுதிகளில் வாழ்கின்ற மக்களுக்கு அரசாங்கத்தினால் பெற்றுக்கொடுக்கப்படுகின்ற சுகாதார சேவையினை போன்று வசதிகளை தோட்டப்புற மக்களுக்கும் பெற்றுக் கொடுப்பதற்கும் அரசாங்கம் தீர்மானித்துளளது.
தோட்டப்புற சுகாதார பிரிவினை அரச சுகாதார பிரிவுடன் இணைப்பதற்கும், அதன் கீழ் தற்போது தோட்ட முகாமைத்துவத்தின் கீழ் பராமரிக்கப்படுகின்ற தோட்ட சுகாதார நிலையங்களை கட்டம் கட்டமாக அரசாங்கத்துக்கு கையகப்படுத்திக் கொள்வதற்கும் சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மலையகத்தில் பாதிப்புகள்

0
0
கடந்த சில நாட்களாக, மலையத்தில் ​நிலவிவரும் சீரற்ற வானிலை, இன்றும் தொடர்ந்த நிலையில், மலையகத்தின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்று, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கண்டி மாவட்ட உதவிப் பணிப்பாளர் இந்திக்க ரணவீர தெரிவித்தார்.
கண்டி மாவட்டம்
கண்டி மாவட்டத்தில், இன்றுக் காலை வரை பெய்த கடும் மழையால், 278 குடும்பங்களைச் சேர்ந்த 1,243 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இவர்களுள் 820 பேர், பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
நுவரெலியா மாவட்டம்
இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில், 337 குடும்பங்களைச் சேர்ந்த 1,336 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று, நுவரெலியா மாவட்டச் செயலாளர் ஆர்.எம்.பி புஷ்பகுமார தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்கள், முகாம்களிலும் உறவினர்களின் வீடுகளிலும் தங்வைக்கப்பட்டுள்ளனர் என்றும் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம், 68 வீடுகள் பகுதியளவிலும் 4 வீடுகளும் முற்றாகவும் சேதடைந்துள்ளன என்றும், இவர்களுக்குத் தேவையான உதவிகள் அனைத்தும், நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் வழங்கப்பட்டு வருவதாகவும், அவர் கூறினார்.
இரத்தினபுரி மாவட்டம்
இரத்தினபுரி மாவட்டத்தில் 14 பிரதேச செயலகப் பிரிவுகளில் 6,133 குடும்பங்களைச் சேர்ந்த 24,625 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென, இரத்தினபுரி மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது.
மேற்படி மாவட்டத்தில் எலபாத்த, இரத்தினபுரி, கிரியெல்ல, அயகம, நிவித்திகல, களவான, எஹலியகொடை, குருவிட்ட, காவத்தை, ஓப்பநாயக்க, பெல்மதுளை, பலாங்கொடை, இம்புலபே, கொடக்கவெல ஆகிய 14 பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள 189 கிராம சேவர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி மாவட்டத்தில் நிலவி வரும் சீரற்ற வானிலையால், இதுவரை 6 குடியிருப்புகள் முற்றாக சேதமடைந்துள்ளனவெனவும் 139 குடியிருப்புகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளனவெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களில் 1,961 குடும்பங்களைச் சேர்ந்த 7,861 பேர் தத்தமது உறவினர்களின் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
மேலும்   493 குடும்பங்களைச் சேர்ந்த 1,951 பேர், 38 இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பதுளை மாவட்டம்
அத்தோடு, பதுளை மாவட்டத்தில், இரண்டு மரணங்கள் சம்பவித்துள்ளன என்றும் 63 வீடுகள் தற்போது சேதமடைந்துள்ளன என்றும், பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரதிப் பணிப்பாளர் ஈ.எல்.எம். உதயகுமார் தெரிவித்தார். அத்தோடு, 51 குடும்பங்களைச் சேர்ந்த 207 பேர், இரண்டு நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, பசறை, ஊவா பரணகம, ஹப்புத்தளை ஆகிய இடங்களில், மேலும் 60 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என்றும் மழை தொடர்ந்து பெய்யுமாயின், பதுளையில் பாதிப்புகள் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, மரங்கள், மின்தூண்கள், கற்பாறைகள் போன்றவை, வீதிகளில் விழுந்துள்ளமையால், மலையகத்தின் பல்வேறு வீதிகளுக்கான போக்குவரத்துகளும் தடைப்பட்டுள்ளன. பாரிய பாதை வெடிப்புக்கள், குடியிருப்பு வெடிப்புகள் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளன. அத்தோடு, மழையுடன் சேர்ந்து, மலையத்தில் கடுமையான குளிரான வானிலை காணப்படுவதால். தொழிலாளர்கள் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
மேல் கொத்மலை, காசல்ரீ, மவுஸ்ஸாகலை, லக்ஷபான, கெனியன், விமலசுரேந்திர போன்ற நீர்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்ந்துள்ளமையால், மேல் கொத்மலை நீர்தேகத்தின் வான்கதவொன்று, நேற்று (23) காலை முதல் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெரீக்கிலோயர் தோட்டத்தில், மண்சரிவு அபாயம் காரணமாக, அங்கிருந்த 33 குடும்பங்களைச் சேர்ந்த 100 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். குறித்த பகுதியிலுள்ள இரண்டு குடியிருப்புகள் சேதமடைந்த பின்னரே, குறித்த 33 குடும்பங்களும் வெளியேற்றப்பட்டுள்ளன.
குறித்த தோட்டப் பகுதியில், குடியிருப்பொன்றுக்கு அடிப்பகுதியில் நீர் ஊற்றெடுத்துச் செல்வதாகவும் இது தொடர்பில், தேசிய மண் பரிசோதனை ஆய்வாளர்களால் அப்பகுதி ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

மண்சரிவு அபாயத்திலுள்ள குடும்பங்களுக்கு முன்னுரிமை

0
0
தென்மேற்கு பருவப்பெயர்ச்சி மழை தற்போது ஆரம்பித்துவிட்டது. இலங்கையில் இயற்கை அனர்த்தமென்றாலே முதலில் ஞாபகத்துக்கு வருவது மலையகமாகவே இருக்கும். குறிப்பாக மே, ஜுன், ஜுலை, ஓகஸ்ட், டிசம்பர் மாதங்களில் அதிக மழை வீழ்ச்சியை எதிர்கொள்ளுகிறது மலையகம். இக்காலங்களில்தான் இயற்கை அனர்த்தங்களுக்கு முகம்கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை மலையக மக்களுக்கு ஏற்படுகிறது.

எனவே பெருந்தோட்டப் பகுதிகளுக்கு அனர்த்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நூற்றுக்கு எழுபத்தைந்து சதவீதமான பெருந்தோட்டக் குடியிருப்புகள் நிலச்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியிருப்பதால் மலையகம் இவ்விடயம் குறித்துப் பெரிதும் அவதானம் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி மாவட்டங்களே பெரிதும் அச்சுறுத்தலுக்குட்பட்டுள்ளன.

பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட லயன் காம்பிராக்கள் ஒன்று மலையுச்சியில் அமைந்திருக்கும். அல்லது மலையடிவாரத்தில் அமைந்திருக்கும். இவ்வாறான மலைப் பாங்கு பகுதிகளிலும் சரிவான பகுதிகளிலும் தான் தற்போது மண்சரிவு ஏற்படுகிறது. மண்ணரிப்பு, முறையான நீர் வழிந்தோடக்கூடிய கான் வசதிகள் இன்மை, மரங்கள் தரிப்பு என இயற்கையும் செயற்கையும் கலந்ததான பௌதீகவியல் குளறுபடிகளினால் சிறு மழையென்றாலே உரு கொண்டு ஊற்றெடுக்கும் நிலத்தடி நீர் வெகு சுலபமாகவே இடப்பெயர்ச்சி செய்கிறது.

இதனால் இப்பகுதிகளில் வாழ்விடங்களைக் கொண்டிருக்கும் மலையக மக்கள் பயத்தோடும் பீதியோடும் எந்த நேரமும் லயக்காம்பிராவை விட்டு வெளியேறத் தயாராயிருப்பது வழமையான ஒன்று. இம்மக்கள் ஏறக்குறைய 200 வருடங்களாக குடியிருந்துவரும் லயக் காம்பிராக்கள் மனித வாழ்வுக்கு அருகதையற்ற நிலைக்குப் போய்விட்டது. கூரைகள், சுவர்கள் பலவீனமடைந்துபோய் காணப்படுகின்றன. நிலத்தடி நீர் கசிவினால் அடித்தளமே ஆட்டம் கண்டு போயுள்ளது. நிலச்சரிவு என்றாலும் மின்சார ஒழுக்கு என்றாலும் கூட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முடியாத அளவுக்கு அமைவிடம் சிதிலமடைந்து போய்விட்டது. இதனைச் சீர்செய்வதென்பது பயனற்ற முயற்சி. இதனாலேயே இவர்களுக்குத் தனித்தனி வீடுகள் தேவை என்ற கோஷம் எழுப்பப்பட்டு வருகின்றது.

ஆனால் இதற்கான நடவடிக்கைகள் மந்த கதியிலேயே இடம் பெறுகின்றன. பல இடங்களில் வீடமைப்புக்காக நாட்டப்பட்ட அடிக்கற்கள் அடையாளம் தெரியாமல் போய்விட்டிருக்கின்றன. இன்னும் சில இடங்களில் கட்டப்பட்ட வீடுகள் கையளிக்கப்படாமல் காடு மண்டிக்கிடக்கின்றன. வேறு சில பகுதிகளில் மண்சரிவு எச்சரிக்கையை எதிர்நோக்கியிருக்கும் (தற்போது லயன் காம்பராக்கள் அமைந்துள்ள பகுதி) பிரதேசங்களுக்கு அருகிலேயே புதிய வீடமைப்புத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதை அவதானிக்கலாம். உண்மையில் தோட்ட மக்களின் வீடமைப்புக்காக பாதுக்காப்பான காணிகளை வழங்குவதில் தோட்ட நிர்வாகங்கள் பொறுப்பற்ற நிலையிலேயே நடந்து கொள்கின்றன. அவை ஒதுக்கும் இடங்கள் குறித்து அவதானிகள் மத்தியில் திருப்தியில்லை.

இதே நேரம் தனிவீட்டுத் திட்டம் ஆமைவேககத்தில் நடைபெற்று வருவதால் இன்னும் பல வருடங்களுக்கு இம்மக்கள் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியே வாழ வேண்டிய துர்ப்பாக்கியம். இவ்வாறான காரணங்களினால் லயக்காம்பிராக்கள் முற்று முழுதாகவே மக்கள் வாழக்கூடிய அந்தஸ்தை இழந்துவிட்டன. ஆனால் இதிலிருந்து மக்களை பாதுகாக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை.
தனி வீட்டுதிட்டங்களில் மண்சரிவு அனர்த்தங்களை எதிர்நோக்கியவர்களுக்கும் மின் கசிவு விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் முன்னுரிமை என்கிறார் அமைச்சர் திகாம்பரம். ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன்னால் இவ்வாறு பாதிக்கப்பட்ட மலையக மக்களில் பலர் இன்னும் தற்காலிக கூடாரங்களிலும் கைவிடப்பட்ட தொழிற்சாலைகளிலும் அவஸ்தைபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அண்மைய மழையால் தற்காலிக கூடாரங்களிலும் கூட நீர் பாய்ந்து சேதமுற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிவாரணப் பொருட்கள் உரிய முறையில் விநியோகிக்கப்படுவது பற்றி அவதானமேதும் செலுத்தப்படவில்லை என்பதே பாதிக்கப்பட்ட மக்களின் மனக்குறையாக இருக்கிறது. மீரியபெத்தை மண்சரிவு அனர்த்தத்தின் பின் மலையக அரசியல்வாதிகளின் செயற்பாடு குறித்து விமர்சனங்கள் எழவே செய்தன. நுவரெலியா மாவட்டத்தில் உயிரிழப்புகள் இல்லாவிட்டாலும் பாதிப்புகள் ஏற்படவே செய்தன. தவிர, வருடாவருடம் நிகழும் இவ்வாறான காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அனர்த்தங்களுக்கு நிரந்தரத் தீர்வுக்கான ஏற்பாடுகள் எதுவுமே மேற்கொள்ளப்படுவதாகவும் தெரியவில்லை.

ஒவ்வொரு வருடமும் இயற்கை அனர்த்த அச்சுறுத்தலுக்கு முகம்கொடுக்க வேண்டிய அபாய நிலையில் இருக்கும் மக்களுக்கு பாதுகாப்பான இடங்களில் மாற்று குடியிருப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டியது முக்கியமான பிரச்சினையாக உள்ளது. அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள், வர்த்தக நிறுவனங்கள் வழங்கும் உதவிகள் தற்காலிக உதவிகளேயாகும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் திருப்தியடைய முடியாது. அரசின் நிவாரணங்களே அவசியமானவை. இந்நாட்டின் குடிமக்கள் என்ற ரீதியில் நியாயமாக கிடைக்க வேண்டியவை. ஆனால் அந்த நிவாரணங்கள் மலையக மக்களை சென்றடைவதில் உரிய அக்கறை காட்டத்தான் யாருமே இல்லை.

அனர்த்தம் பற்றிய விபரங்களை ஆளுக்காள் சேகரித்தாலும் அதற்கான நிவாரணங்கள் வழங்கப்படுவதில் நியாயமாக நடந்து கொள்வதைத்தான் காணமுடியவில்லை. எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று பொதுவாக கூறிவிட்டு நழுவிக்கொள்ளும் நிலையிலேயே அரச அதிகாரிகளின் போக்கு காணப்படுகின்றது. காலி, களுத்துறை, மாத்தறை, பதுளை, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி போன்ற மாவட்டங்கள் வருடாவருடம் இயற்கை அனர்தங்களுக்குட்படும் நிலையில் இதனால் அதிக இழப்புகளை மலையக மக்களே சந்திக்க வேண்டி நேரிடுகிறது. இவர்களின் வாழ்விடம் அமைந்துள்ள பகுதிகள் மேட்டு நிலங்களாகவும் சரிவுகளாகவும் இருப்பதால் மண்சரிவு, மரம் சரிந்து முறிந்து விழல், இடி, மின்னல் தாக்கம் போன்றவற்றின் தாக்கங்களால் அடிக்கடி பாதிப்புக்குள்ளாகின்றன. இதிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியாதபடி பெருந்தோட்டக் கட்டமைப்பு முகாமைத்துவம் உள்ளது.

இவர்களை அச்சுறுத்தலுக்குள்ளாகி இருக்கும் இடங்களிலிருந்து அகற்றி பாதுகாப்பான இடங்களில் குடியேற்ற எந்தத்திட்டமும் தோட்டக் கம்பனிகளிடம் இல்லை. அரசாங்கம் வீடமைப்பு திட்டங்களை ஏற்படுத்த முன்வந்தாலும் தேவையான, பாதுகாப்பான இடங்களை ஒதுக்கித் தருவதில் தோட்டக் கம்பனிகள் போதுமான ஒத்துழைப்பு வழங்குவதில்லை. மீரியபெத்தை மக்களுக்கு பாதுகாப்பான இட ஒதுக்கீடு செய்வதில் தோட்ட நிர்வாகம் காட்டியிருந்த அலட்சியம் பற்றி அரசு அதிகாரிகள் கூட விசனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனவேதான் அனர்த்தம் என்று வந்துவிட்டால் அனைத்தையும் இழந்து அம்போவாகி விடுவோமோ என்று மக்கள் அச்சப்படும் நிலை தோன்றியுள்ளது. இந்த நிலையைப் போக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்கப்படுவதோடு மீண்டும் இவ்வாறன அனர்த்தங்களுக்கு முகம் கொடுக்காதபடி பாதுகாப்பான இடங்களில் குடியிருப்புகளை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
இந்திய அரசாங்கம் வழங்கியுள்ள 4000 வீடுகள், வழங்க உறுதியளித்துள்ள 10,000 வீடுகள் இந்த அரசாங்கத்தின் 25,000 தனித்தனி வீட்டுத் திட்டங்கள் மலையகத்துக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன. இதற்கான முன்னகர்வுகளும் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான வீட்டுத் திட்டங்களில் அனர்த்த அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருப்போர், ஆளாகலாமென எச்சரிக்கப்பட்டிருப்போருக்கு முன்னுரிமை வழங்கப்படுவது அவசியமே. ஏனெனில் அதிக மழை வீழ்ச்சி ஆரம்பமானதும் குடியிருப்புகளை விட்டு வெறியேற அறிவுறுத்துவதும் மழை குறைந்ததும் மீண்டும் பழைய இடங்களுக்கே திருப்ப பணிக்கப்படுவதுமே வழமையாக நடக்கும் விடயமாக இருக்கிறது. இடைக்கால தங்குமிடங்களாக பாடசாலை, கோவில், சனசமூக நிலையங்களே பயன்படுத்தப்படுகின்றன.
அதிகாரிகள் மட்டத்தில் எச்சரிக்கை விடுவதோடு அவர்கள் பணி முடிந்துபோய் விடுகின்றது. ஆனால் அச்சுறுத்தலுக்கு முகம் கொடுப்பவர்களுக்கு நிரந்தரமான மாற்று ஏற்பாடுகள் பற்றி எவருமே கவனமெடுப்பதில்லை. இதனால் மக்கள் மழை ஆரம்பித்துவிட்டால் பயத்துடனும் பதட்டத்துடனும் நாட்களை கழிக்க வேண்டியேற்படுகின்றது. இது குறித்து நியாயமாகவும் நேர்மையாகவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.

அனர்த்த அபாயங்களை எதிர்நோக்கியிருக்கும் குடும்பங்களுக்கு பாதுகாப்பான இடங்களில் வீடுகள் அமைத்துத் தரப்படும் என்று கூறப்படுகின்றது. இது துரிதப்படுத்தப்படுவது முக்கியம். கடந்த வாரம் புதிதாக அமைக்கப்பட்ட ஒரு தொகுதி வீடுகள் மண்சரிவு, மின்கசிவு விபத்துகளினால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு வழங்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. எதிர்வரும் காலங்களில் மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு, சமுதாய அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் வீடமைப்பு திட்டங்களில் மண்சரிவு அபாயங்கள் நிலவும் பகுதிகளில் குடியிருப்புகளைக் கொண்டிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதே உசிதமானது. இல்லாவிடில் மழைக்காலம் ஆரம்பித்துவிட்டால் அகதி கோலம்பூண்டு அலைகழிப்புக்குள்ளாகும் அவலம் மட்டும் அகலப்போவதே இல்லை!

நன்றி- தினகரன் 

Viewing all 376 articles
Browse latest View live