பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கான கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகி நான்கு மாதங்கள் நிறைவடையப்போகின்ற நிலையிலும் புதிய கூட்டு உடன்படிக்கையை உருவாக்குவதற்கான முயற்சிகள் தொடர்ச்சியாக தோல்வியையே சந்தித்து வருகின்றன. பெருந்தோட்ட தொழிலாளர்கள் தமக்கு நாட் சம்பளமாக 1000 ரூபாவை வழங்கக்கோரி நிற்கின்ற நிலையில் முதலாளிமார் சம்மேளனம் அதனை நிராகரித்துவருகின்றது. கூட்டு ஒப்பந்த விவகாரம் தொடர்பில் இதுவரை ஆறு சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவிட்டபோதும் அவை தோல்வியிலேயே முடிவடைந்தன. முதலாளிமார் சம்மேளனத்துக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இதுவரை நடைபெற்ற நான்கு சுற்று பேச்சுவார்த்தைகளும் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளன. அதன் பின்னர் தொழில் அமைச்சுக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிவடைந்தன. அந்தவகையில் நடைபெற்ற அனைத்து பேச்சுவார்த்தைகளிலும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் சார்பில் 1000 ரூபா நாட் சம்பளம் கோரப்பட்டுவருகின்ற போதும் தோட்ட கம்பனி நிர்வாகங்கள் அந்த கோரிக்கையை நிராகரித்துவருகின்றன. முதலாளிமார் சம்மேளனத்துக்கும் தொழில் அமைச்சுக்கும் இடையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆறாவது சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு மொத்த சம்பளமாக 700 ரூபாவை வழங்க முன்வந்தன. எனினும் தொழிலாளர்கள் சார்பில் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட தொழிற்சங்கங்கள் கம்பனிகளின் இந்த அறிவிப்பை நிராகரித்துள்ளன. தொழிற்சங்கங்கள் சம்பள உயர்வாக 1000 ரூபாவையே பெற்றுத்தர வேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் 700 ரூபாவைவிட அதிகரிக்க முடியாது என்ற ரீதியில் முதலாளிமார் சம்மேளனமும் பிடிவாதப் போக்கை கடைப்பிடித்ததால் நான்கு மணி நேரம் நீடித்திருந்த ஆறாவது சுற்றுப் பேச்சுவார்த்தை இணக்கப்பாடுகள் இன்றி முடிவுக்கு வந்தது. எனினும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் நிறைவடைந்ததும் மீண்டும் பேசித் தீர்மானம் ஒன்றுக்கு வருவதென முடிவெடுப்பதற்கு இந்த ஆறாவது சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது இணக்கம் காணப்பட்டுள்ளது. தொழில் அமைச்சர் எஸ்.பி. நாவின்ன தலைமையில் தொழில் அமைச்சில் இடம்பெற்ற இப்பேச்சுவார்த்தையில் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் கே.வேலாயுதம் உள்ளிட்ட பிரதிநிதிகள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள், பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பின் பிரதிநிதி, முதலாளிமார் சம்மேளனத்தின் அதிகாரிகள், தோட்ட முகாமைத்துவ கம்பனிகளின் நிறைவேற்று அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். அதாவது தற்போதைய சூழ்நிலையில் சர்வதேச சந்தையில் தேயிலையின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதன் காரணமாக கம்பனிகளுக்கு நஷ்டம் ஏற்படுவதாகவும் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவது இன்றைய நிலையில் சாத்தியமில்லை எனவும் 700 ரூபாவையே மொத்த சம்பளமாக வழங்கமுடியும் என கம்பனிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கம்பனிகளின் இந்நிலைப்பாட்டை நிராகரித்துள்ள பெருந்தோட்டத் தொழில் இராஜாங்க அமைச்சர் கே.வேலாயுதம், கம்பனிகள் கொடுக்கின்ற பணிகளை தொழிலாளர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் முழுமையாக நிறைவேற்றுகின்றனர். எனவே அவர்களுக்கு நியாயமான சம்பள அதிகரிப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியதுடன் தோட்டங்களை இலாபமீட்டும் வகையில் நிர்வகிக்க வேண்டியதும் அபிவிருத்தி செய்யவேண்டியதும் தோட்டக் கம்பனிகளின் பொறுப்பாகும். அதற்கு தொழிலாளர்கள் பொறுப்புக் கூறமுடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். கூட்டு ஒப்பந்த காலம் கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்த நிலையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸினால் தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பொன்றை முதலாளிமார் சம்மேளனம் வழங்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அந்தக் கோரிக்கையை பெருந்தோட்டத்துறையின் ஏனைய தொழிற்சங்கங்களும் வலியுறுத்தியதுடன் போராட்டங்களும் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் இதுவரை விமோசனம் கிடைக்காமல் உள்ளது. இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தமது உடலை வருத்தி மேற்கொள்கின்ற உழைப்புக்கு ஏற்ற நியாயமான ஊதியத்தை பெறுவதில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் பாரிய போராட்டத்தையே நடத்தவேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது. நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் தோட்ட தொழிலாளர்களின் உழைப்புக்கு நியாயமான சம்பளம் கிடைக்காமல் இருப்பதானது பெரும் வேதனைக்குரிய நிலையாகும். நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பில் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையிலும் மக்களின் சமூக வாழ்க்கை நிலையில் முன்னேற்றங்கள் வந்துகொண்டிருக்கின்ற சூழலிலும் பெருந்தொட்ட தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையும் அவர்களின் பொருளாதாரக் கட்டமைப்பும் தொடர்ந்தும் வீழ்ச்சிப்பாதையில் பயணிப்பதானது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். அந்த மக்களின் வருமான கட்டமைப்பானது தொடர்ந்தும் பரிதாபகரமான நிலையிலேயே இருந்துவருகின்றது. இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கான கூட்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுவருகின்ற போதிலும் அந்த மக்கள் கோருகின்ற நியாயமான சம்பள உயர்வு அவற்றின் ஊடாக வழங்கப்பட்டதில்லை. இதனால் பெருந்தோட்ட மக்கள் மிகவும் பரிதாபகரமான வாழ்க்கையையே நடத்தவேண்டிய துர்ப்பாக்கிய சூழல் நிலவிவருகின்றது. பெருந்தோட்ட மக்கள் வறுமை நிலையிலேயே தமது வாழ்க்கைப் பயணத்தைக் கொண்டு நடத்தவேண்டியுள்ளதால் பாரிய பொருளாதார பிரச்சினைகளை சந்தித்துவருகின்றனர். தமது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்கி அவர்களை சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு கொண்டுவருவதில் அந்த மக்கள் பாரிய பிரச்சினைகளையும் சிக்கல்களையும் எதிர்நோக்கிவருகின்றனர். கல்விப் பிரச்சினை, சுகாதாரப் பிரச்சினை, போக்குவரத்து மற்றும் சமூக வசதியின்மை உள்ளிட்ட பல சிக்கல்களுக்கு பெருந்தோட்ட மக்கள் முகம்கொடுத்துவருகின்றனர். தமது அன்றாட வாழ்க்கையை கொண்டு நடத்துவதற்கு பாரிய திண்டாட்டங்களையே தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கிவருகின்றனர். எனவே தோட்டத்தொழிலாளர்களின் இந்தப் பிரச்சினையை தொடர்ந்து இழுத்தடிப்பதற்கு இடமளிக்கக்கூடாது. 1000 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதில் மலையக தொழிற்சங்க மற்றும் அரசியல் தலைமைகள் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டியது அவசியமாகும். எக்காரணம் கொண்டும் தோட்டத் தொழிலாளர்களின் நியாயமான சம்பள கோரிக்கையான 1000 ரூபா விடயத்தை தொழிற்சங்க மற்றும் அரசியல் தலைமைகள் கைவிட்டுவிடக்கூடாது. அத்துடன் இது தோட்டத்தொழிலாளர்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையிலான பிரச்சினை என்று கருதி அரசாங்கம் இந்த விடயத்தில் மௌனப் போக்கை கடைப்பிடிக்கக்கூடாது. தொழில் அமைச்சு இந்த விடயத்தில் ஆக்கபூர்வமான பங்களிப்பை செய்ய முன்வரவேண்டும். ஏற்கனவே தொழில் அமைச்சு முதலாளிமார் சம்மேளனத்துடன் இந்த விவகாரம் தொடர்பில் இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தி ஒரு ஆரோக்கியமான தலையீட்டை மேற்கொண்டுள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும். ஆனால் இத்துடன் நிறுத்திவிடாமல் தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வு கிடைக்கும் வரை அரசாங்கம் இந்த விடயத்தில் தலையிடவேண்டியது அவசியமாகும். தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் காணப்படுகின்ற துயர்மிக்க வரலாற்றுக்கு முடிவு கட்டவேண்டியது அவசியமாகும். அந்த மக்களின் நியாயமான சம்பள அதிகரிப்புக்கு வழிவகுக்கவேண்டியது கட்டாயம். தொடர்ந்து அந்த மக்கள் வேதனையுடன் வாழும் நிலைக்கு இட்டுச்செல்லக்கூடாது. தோட்டக் கம்பனிகள் நஷ்டத்தில் இயங்குகின்றன என்று கூறி மக்களின் நியாயமான சம்பள உயர்வை வழங்காமல் விட்டுவிடக்கூடாது. நடைமுறையில் இருந்த கூட்டு உடன்படிக்கை காலாவதியாகி நான்கு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் அதனை தொடர்ந்தும் இழுத்தடித்துக்கொண்டிருக்காமல் இந்த விடயத்துக்கு உடனடியாக தீர்வைக்காண அனைத்து தரப்பினரும் அர்ப்பணிப்புடன் தமது பங்களிப்பை செய்ய முன்வரவேண்டும் என்பதனை வலியுறுத்துகின்றோம். நன்றி- வீரகேசரி |
சம்பள விவகாரத்தில் இழுத்தடிப்பு வேண்டாம்
↧
↧
23,500 ரூபா சம்பளம் என்பதில் உண்மையில்லை
பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கென்று நியமனம் பெற்ற உதவி ஆசிரியர்களுக்கு கூடுதல் சம்பளம் பெற்றுக் கொடு க்கப்படுமாயின் முதலில் மகிழ்ச்சியடைபவன் நானாகவே இருப்பேன். ஆனால் உதவி ஆசிரியர்களுக்கு 23 ஆயிரத்து ஐநூறு ரூபா என்றடிப்படையில் கூடுதல் சம்பள த்தைப் பெற்றுக் கொடுப்பதாகக் கூறி வருவது உண்மைக்குப் புறம்பானதாகு மென்று இ.தொ.கா வின் உப தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
மடுல்சீமை, ஊவா பரணகமை, அப்புத்தளை போன்ற இடங்களில் நடைபெற்ற இ.தொ.கா. வின் தேர்தல் பிரசாரக்கூட்டங்களில் இ.தொ.கா. உப தலைவர் செந்தில் தொண்டமான் கலந்து கொண்பேசுகை யில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.தொடர்ந்து அவர் பேசுகையில்;
‘‘கடந்த ஆட்சியின் போது இ.தொ.கா. எடுத்துக் கொண்ட முயற்சிகளின் பலனாக மூவாயிரம் உதவி ஆசிரியர் நியமனங்கள் வழங்க அரசு இணக்கம் தெரிவித்திருந்தது. அதற்கமைய புதிய ஆட்சயின் போது ஒரு தொகுதி உதவி ஆசிரியர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன. இந்நியமன ங்களில் ஊவா மாகாணத்தில் 599 பேர் உள்வாங்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு 23 ஆயிரத்து ஐநூறு ரூபா என்ற அடிப்படை யில் கூடுதல் சம்பளம் பெற்றுத் தருவதாக மாகாண அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்திருந்தார்.அவ்வுதவி ஆசிரியர்களுக்கு கடந்த மாதம் வழங்கப்பட்ட சம்பளமும் வர்த்த மானி அறிவித்தலில் குறிப்பிட்டிருந்தப டியே வழங்கப்பட்டிருக்கின்றது. அவர்களுக்கு கூடுதல் சம்பளத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கான எந்தவொரு முயற்சியும் எடுக்கப்படவில்லை. கூடுதல் சம்பளம் பெற்றுக் கொடுப்பதாக கூறப்படும் கூற்று க்கள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானதாகும். புத்திஜீவிகளான ஆசிரியர் சமூகத்தையே ஏமாற்றியிருக்கும் இவர்கள் பாமர மக்களை எவ்வகையில் ஏமாற்றுவார்கள் என்பது அம் மக்களுக்கே தெரிந்த விடயமாகும்.
கூடுதல் சம்பளம் பெற்றுக் கொடுப்பது தொடர்பான உண்மை நிலையினையறிய சம்பந்தப்பட்டவர்களை அணுகி வினவியபோது, ‘‘நியமனங்கள் வழங்கப்பட்ட உதவி ஆசிரியர்களுக்கு வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிட்டுள்ள பிரகாரம், சம்பளம் வழங்கப்பட்டு வருகின்றது. கூடுதல் சம்பளம் வழங்கப்பட வேண்டுமென்பது குறித்து எத்தகைய தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை” என்று கூறினர்.
தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பள உயர் வினை இ.தொ.கா. பெற்றுக் கொடுப்பது உறுதியாகும். பெற்றுக் கொடுக்க முடியாவிட்டால் இ.தொ.கா. அக் கோரிக்கையை முன்வைக்காது. தோட் டக் கம்பனிகளின் ஆதரவாள ர்களாக செயல்பட்டுவரும் மலையக தொழிற்சங்கங்கள் சில ஆயிரம் ரூபா சம்பள உயர்வினை வழங்க மறுக்கும் கம்பனியாளர்களை எதிர்க்காமல் சம்பள உயர்வினைப் பெற்றுக் கொடுக்க முனையும் இ.தொ.கா. வை எதிர்க்கவும், விமர்ச னம் செய்யவுமான செயல்பாடுகளை மேற்கொள்கின்றனர்.பெருந்தோட்ட மக்கள் குறித்து அக்கறை யுடனும் உணர்வு பூர்வமாகவும் செயற்ப டும் ஒரே அமைப்பு இ.தொ.கா. மட்டுமேயாகும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற் கும் இ.தொ.கா. விற்கும் இடையில் பூரண நல்லுறவுகள் தொடர்ந்த வண்ணமேயு ள்ளன. அந் நல்லுறவுகளின் பயனாக மேலும் மூவாயிரம் தமிழ் ஆசிரியர்களுக்கு நியமனங்களைப் பெற்றுக் கொடுக்கவும், தோட்டப் பிரிவுகள் அடிப்படையில் ஒவ் வொரு தோட்டப் பிரிவிற்கும் கிராம சேவை உத்தியோகத்தர்களை நியமிக்கவும் ஏற்பாடுகளை செய்து வருகின்றோம் என் றார்.
↧
மனசாட்சி உடன்படிக்கையில் மலையக மக்களுக்கும் தீர்வு
மக்கள் விடுதலை முன்னிணியின் மனசாட்சி உடன்படிக்கையில் தமிழ், சிங்கள, முஸ்லிம்,கிறிஸ்தவ மக்கள் உட்பட மலையக மக்களின் பிரச்சினை களுக்கும் தீர்வு உள்ளடக்கப்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினை க்கு சரியான தீர்வு பெற்று கொடுப்பதோடு அவர்களின் சம்பள உயர்வு விடயத்தில் நாம் போராட்டம் நடத்தி அதை பெற்றுகொடுக்க முன்னின்று செயல்படுவோம் என்று தெரிவித்துள்ள சுந்தரலிங்கம் பிரதீப் ஊழல் இல்லாத அரசியல் கட்சியாக மக்கள் விடுதலை முன்னணி செயற்பட்டு வருகின்றது. தவறு செய்பவர்களை தட்டி கேட்கக்கூடிய தகுதி, இக்கட்சிக்கு மட்டுமே உள்ளது என்றார்.
'கடந்தகால தேர்தல்களைவிட இம்முறை தேர்தலில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக நான்கு இன மக்களும் என்றும் இல்லாதவாறு இன்று, மக்கள் விடுதலை முன்னணியை ஆதரிக்கின்றனர். இதனால், இரத்தினபுரி மாவட்டத்தில் ம.வி.மு.இன் பிரதிநிதி ஒருவர் நிச்சயமாக நாடாளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்படுவது உறுதியாகிவிட்டது.
'மக்களின் கஷ்டங்களை நன்கு அறிந்த ம.வி.மு மக்களுக்காக குரல் கொடுப்பதற்கு என்றுமே தயாராக உள்ளது. இன,மத,மொழி,பேதங்களின்றி ஒரே குறிக்கோளுடன் செயற்பட்டு வரும் மக்கள் விடுதலை முன்னணியுடன் நாம் அனைவரும் ஒன்றிணைவோம்'என அழைப்புவிடுத்தார்.
↧
மெதுவாக பணி செய்த காலத்துக்குரிய சம்பளம் இல்லை
1,000 ரூபாய் சம்பளத்தை வலியுறுத்தி கடந்த ஜூலை மாதம் 6ம் திகதி முதல் 16ம் திகதிவரை பெருந்தோட்ட தொழிலாளர்கள் முன்னெடுத்து வந்த மெதுவாக பணி செய்த காலத்துக்குரிய பணம் மாதாந்த வேதனத்தில் சேர்க்கப்படாததால் தொழிலாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையின் 4ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் நிறைவடைந்ததால், அப் பேச்சுவார்த்தையிலிருந்து இ.தொ.கா. வெளிநடப்பு செய்ததுடன் ஜூலை 6ம் திகதி முதல் பெருந்தோட்ட தொழிலாளர்களை மெதுவாக பணிசெய்யும் போராட்டத்தில் ஈடுபடுமாறு பணித்தது.
இதற்கமைவாக பெருந்தோட்டங்களைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் 1,000 ரூபாய் சம்பளத்தை வலியுறுத்தி மெதுவாக பணிசெய்யும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இக் காலப் பகுதியில் வழமையாக எடுக்கும் கொழுந்தின் நிறைக்கு பதிலாக 3 கிலோ கிராம் கொழுந்தே எடுத்தனர். இது தோட்ட கம்பனிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதால் தோட்ட அதிகாரிகளும் பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொள்ள தொடங்கினர்.
இருதரப்பு போரட்டங்களும் நீடித்ததில் எடுக்கப்பட்ட கொழுந்துகள் பிரயோசனமற்ற நிலையில் குப்பைகளில் கொட்டப்பட்டன.
நிலைமையை கருத்தில் கொண்டு மீண்டும் தொழிற்சங்கங்களுக்கும் 23 கம்பனிகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தை கடந்த மாதம் 15ஆம் திகதி அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தலைமையில் தொழில் அமைச்சில் நடைபெற்றது.
இப் பேச்சுவார்த்தையில் மெதுவாக பணி செய்த காலத்துக்குரிய வேதனத்தையும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டுமென பிரதான தொழிற்சங்கமான இ.தொ.கா வலியுறுத்தியது.
இப் பேச்சுவார்த்தை எவ்வித முடிவுகளும் எட்டப்படாத நிலையில் தேர்தலுக்கு பின் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ´இம் மாத வேதனம் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதுள்ளதாகவும் மெதுவாக பணிசெய்த காலத்துக்குரிய வேதனத்தை தவிர்த்தே மாதாந்த சம்பளம் வழங்கப்பட்டுள்ளதால் தாம் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதனால், கடன் வாங்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் தமது பிள்ளைகளை வழியனுப்புவதற்கு கூட பணம் வழங்க முடியாத நிலையில் அவல வாழ்வை எதிர்கொண்டுள்ளதாகவும் இம் மக்கள் தெரிவிக்கின்றனர். சில தோட்டங்களில் இன்று (10) மாதாந்த சம்பளம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு தோட்ட தொழிலாளிகளுக்கு இம்முறை சம்பளம் 40 வீதம் குறைவாக காணப்பட்டிருப்பதாகவும் அத்தோடு தோட்ட கம்பனியால் மேலதிகமாக முற்கொடுப்பனவாக 2000 ரூபாய் தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தோட்ட கம்பனி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையின் 4ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் நிறைவடைந்ததால், அப் பேச்சுவார்த்தையிலிருந்து இ.தொ.கா. வெளிநடப்பு செய்ததுடன் ஜூலை 6ம் திகதி முதல் பெருந்தோட்ட தொழிலாளர்களை மெதுவாக பணிசெய்யும் போராட்டத்தில் ஈடுபடுமாறு பணித்தது.
இதற்கமைவாக பெருந்தோட்டங்களைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் 1,000 ரூபாய் சம்பளத்தை வலியுறுத்தி மெதுவாக பணிசெய்யும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இக் காலப் பகுதியில் வழமையாக எடுக்கும் கொழுந்தின் நிறைக்கு பதிலாக 3 கிலோ கிராம் கொழுந்தே எடுத்தனர். இது தோட்ட கம்பனிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதால் தோட்ட அதிகாரிகளும் பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொள்ள தொடங்கினர்.
இருதரப்பு போரட்டங்களும் நீடித்ததில் எடுக்கப்பட்ட கொழுந்துகள் பிரயோசனமற்ற நிலையில் குப்பைகளில் கொட்டப்பட்டன.
நிலைமையை கருத்தில் கொண்டு மீண்டும் தொழிற்சங்கங்களுக்கும் 23 கம்பனிகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தை கடந்த மாதம் 15ஆம் திகதி அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தலைமையில் தொழில் அமைச்சில் நடைபெற்றது.
இப் பேச்சுவார்த்தையில் மெதுவாக பணி செய்த காலத்துக்குரிய வேதனத்தையும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டுமென பிரதான தொழிற்சங்கமான இ.தொ.கா வலியுறுத்தியது.
இப் பேச்சுவார்த்தை எவ்வித முடிவுகளும் எட்டப்படாத நிலையில் தேர்தலுக்கு பின் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ´இம் மாத வேதனம் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதுள்ளதாகவும் மெதுவாக பணிசெய்த காலத்துக்குரிய வேதனத்தை தவிர்த்தே மாதாந்த சம்பளம் வழங்கப்பட்டுள்ளதால் தாம் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதனால், கடன் வாங்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் தமது பிள்ளைகளை வழியனுப்புவதற்கு கூட பணம் வழங்க முடியாத நிலையில் அவல வாழ்வை எதிர்கொண்டுள்ளதாகவும் இம் மக்கள் தெரிவிக்கின்றனர். சில தோட்டங்களில் இன்று (10) மாதாந்த சம்பளம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு தோட்ட தொழிலாளிகளுக்கு இம்முறை சம்பளம் 40 வீதம் குறைவாக காணப்பட்டிருப்பதாகவும் அத்தோடு தோட்ட கம்பனியால் மேலதிகமாக முற்கொடுப்பனவாக 2000 ரூபாய் தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தோட்ட கம்பனி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
↧
மலையக கட்சிகளின் பதில் என்ன?
இலங்கை அரசியலில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி யுள்ளது. ரணில் தலைமை யிலான ஐக்கிய தேசிய முன்ன ணிக்கும் மஹிந்த தலைமை யிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கும் இடையே பலமான போட்டி நிலவுகிறது. மலையகத்தில் போட்டியிடுகின்ற திகாம்பரம், ராதாகிருஷ்ணன் சார்ந்துள்ள கட்சிகள் ரணிலுக்கு ஆதரவு வழங்குவதோடு, ரங்காவின் கட்சியும் ஆறுமுகம் தொண்டமானின் காங்கிரஸ் கட்சியும் மஹிந்தவுக்கு ஆதரவு வழங்கி புதிய ஆட்சியைக் கைப்பற்ற முழு மூச்சுடன் களத்தில் நிற்கின்றன.
மலையகம் சார்ந்த தமிழ் கட்சிகளில் ரங்காவின் கட்சியைத் தவிர திகாம்பரம், ராதாகிருஷ்ணன், ஆறுமுகம் தொண்டமான் சார்ந்த கட்சிகள் பதுளை, நுவரெலியா பிரதேசங்களில் ஆசனங்களைப் பெற வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மலையகத்தின் ஏனைய பிரதேசங்களில் தமிழ் வாக்குகளை யானைக்கும் வெற்றிலைக்கும் பெற்றுக்கொடுப்பதில் மலையகக் கட்சிகள் ஆர்வத்தோடு செயற்படுகின்றன. தமது அணிக்கு வெற்றி வாய்ப்பைப் பெற்றுக்கொடுத்து நாடாளுமன்ற ஆசனங்களை பெற்றுக் கொள்ளத் துடிக்கும் மலையக அரசியல்வாதிகள் தமது அணிசார்ந்து பெருந்தோட்டத்துறை வாழ் மக்களுக்கும் பொதுவாக மலையகத்துக்கும் பெற்றுக்கொடுக்கப் போவது என்ன? மக்களைக் கவரும் மேடைப் பேச்சுக்களோ, துண்டுப்பிரசுரங்களில் குறிப்பிடப்படுபவை போன்றன என்றும் ஏட்டுச்சுரக்காய்தான்.
முன்னைய மஹிந்தரின் ஆட்சியிலும், இவ்வருடம் ஜனவரியில் பதவியேற்ற ரணில் தலைமையிலான அரசும் தொழிலாளர்களுக்கு 7 பர்ச்சஸ் காணி என்பதையே உறுதிப்படுத்திவிட்டன. இரண்டாவது, சம்பள ஒப்பந்த விடயம். தேர்தல் முடிந்ததும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும். இதனை விட வேறு விடயங்கள் உள்ளனவா?
பெருந்தோட்டங்களை உள்ளடக்கி மலையக வாழ் தமிழர்களின் தனித்துவமிக்க அடையாளங்களை பேணிப்பாதுகாக்கவும் சமூக, கலை, கலாச்சார, பாதுகாப்பு விடயமாகவும் மண்சார்ந்த பொருளாதார அபிவிருத்தி தொடர்பாகவும் முன்னெடுக்கப்படும் அரசியல் நகர்வுகள் என்ன?
இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 1911இல் 13 வீதமாக இருந்த மலையகத் தமிழர்கள் 2011இல் 4.8 வீதமாக குறைந்திருப்பதற்கான சமூக அரசியல் பின்னணி என்னவென ஆராய வழிவகுக்கப்படுமா? இதன் பாதிப்புகள் வெளிக்கொணரப் படுமா? (பெருந்தோட்ட ஆரம்பப் பாடசாலை கள் பிள்ளைகளின் வரவின்றி தொடர்ச்சியாக மூடப்படுகின்றன).
அரசு பெருந்தோட்டங்களை பொறுப்பேற்றுக் கொண்டதும் JEDB, SLSPC, எல்கடுவ பிளான்டேஷன் கம்பனி ஆகியவற்றிடமும் பெருந்தோட்டங்கள் நிறுவைக்குக் கொடுக்கப்பட்டன. இத்தோட்டங்களில் தொழில்புரிந்தோரின் EPF, ETF பணமான ரூபா 1888 மில்லியனுக்கும் அதிகமான தொகை மிக நீண்டகாலமாக மத்திய வங்கியில் வைப்பிலிடப்படவில்லை என்று கூறப்படுகிறது. இப்பணத்தின் உரிமையாளர்களான தொழிலாளர்களுக்கு வழங்கும் பாதுகாப்பு உத்தரவாதம் என்ன?
பெருந்தோட்டங்களைப் பொறுத்தவரை 1904இல் – 1320, 1980இல் – 668, 1992இல் – 506, 2013இல் – 427 என தோட்டங்கள் குறைந்துகொண்டு வருகின்றன. இதனால், இத்துறை சார்ந்த தொழிலாளர்களுக்கு ஏற்படும் சமூக பாதிப்புகள் பற்றி ஆராயப்படுமா?
தொழிலாளர்களாக 1981இல் – 497,995 பேர், 1992இல் – 376,498 பேர், 2013இல் – 193,412 பேர் எனக் குறைந்துள்ளதோடு, தொழிலாளர்கள் சுயமாகவே பெருந்தோட்டங்களை விட்டு வெளியேறுவதற்கான பின்புலங்கள் திட்டமிட்டே உருவாக்கப்படுகின்றமைக்கான அரசியல் பொருளாதார காரணிகள் கண்டறியப்படவும், இவர்கள் தமது வாழ்விடங்களில் தொடர்ந்து பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட திட்டங்கள் உள்ளனவா?
மேலும், 1995இல் 82,000 ஹெக்டேயராக இருந்த சிறு தோட்டங்க ள் 2012இல் 120,000 ஹெக்டேயராக அதிகரித்துள்ளதோடு, தேயிலை உற்பத்தியில் 70 வீதத்தினை இவர்களே மேற்கொள்கின்றனர். இன்று ஐந்து இலட்சத்திற்கும் அதிகமானோர் சிறுதோட்ட உரிமையாளர்களாக உள்ளனர். இந்நிலைக்கு 200 ஆண்டுகால அனுபவம் வாய்ந்த மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களும் உயர்த்தப்படுவார்களா?
மலையகப் பெருந்தோட்ட தொழிலாளர் சம்பள மற்றும் நல விடயமாக 2 வருடத்திற்கு ஒருமுறை ஒப்பந்தம் செய்துக்கொள்ளப்படுகிறது. அதற்காக போலிப் போராட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. இந்நிலையில் இருந்து பெருந்தோட்டத் தொழிலாளர்களை விடுவித்து நிலத்தோடு ஒட்டிய சுயபொருளாதாரத்தில் அபிவிருத்தியடைய வகுத்துள்ள திட்டம் என்ன?
பெருந்தோட்ட தொழிலாளர்களில் 32 வீதமானோர் ஏழ்மை நிலையில் உள்ளனர் என்றும், 11.4 வீதமானோர் தேசிய வறுமைக் கோட்டுக்குக் கீழ் நிலையில் வாழ்கின்றனர் என்றும் கடந்தகால புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்நிலை போக்க எடுக்கப்படவுள்ள உடனடி நடவடிக்கைகள் ஏதும் உண்டா?
பெருந்தோட்டங்கள் தோறும் சிறுவர் பராமரிப்பு நிலையங்களும் பாலர் பாடசாலைகளும் உருவாக்கப்படுகின்றன; வரவேற்றகத் தக்கது. இது தொழில் காரணங்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளன. இதை யாவரும் அறிவர். இந்நிலையில், வாழ்வின் இறுதிவரை உழைத்து வயதுமுதிர்ந்த நிலையில் ஆதரவற்று இருப்போருக்காக வயோதிப இல்லங்கள் உருவாக்கப்பட திட்டங்கள் உள்ளனவா?
பெருந்தோட்டக் கம்பனிகள் தமது பயன்பாட்டிலிருந்து வருடாந்தம் ஒதுக்கப்படும் காணிகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், அதாவது, 2005 – 2011 காலப்பகுதியில் வருடாந்தம் 1,650 ஹெக்டேயர் காணிகள் பாவனையிலிருந்து நீக்கப்படுவதாகக் கூறப்படுகின்றது. பெருந் தோட்டங்கள் தொடர்ச்சியாக நட்டமடைவதாகக் கூறுகின்ற இக்காலக்கட்டத்தில் காணி சட்டத்தின் கீழ் மீண்டும் அரசு பெருந்தோட்ட காணிகளைப் பொறுப்பேற்று பிரதேச செயலர்கள் ஊடாக மலையக மக்களுக்கு காணிகள் பகிர்ந்தளிக்க புதிய திட்டங்கள் வகுக்கப்படுமா?
இறுதியாக மலையக மக்களும் இந்நாட்டில் வாழும் இன்னுமொரு தேசிய இனம் என்பதற்கான அனைத்து அடையாளங்களும், உரிமைகளும் கொண்டிருப்பவர்களாக விளங்குகின்றனர். இலங்கை வாழ் மலையக மக்கள் எனும் கௌரவ நிலையை அரசியல் சாசனம் ஊடாக உறுதிப்படுத்த முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் என்ன?
மலையக அரசியல்வாதிகளே எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் உங்களுக்கான சலுகைகளையும் பாதுகாப்பையும் அதிகரித்துக் கொள்வீர்கள். பாதுகாப்புப் படைகளோடு உலாவருவீர்கள். உங்களுக்கு வாக்களித்த மக்கள் இந்நாட்டின் கௌரவ பிரஜைகளாக வாழ அரசியல், பொருளாதார, சமூக பாதுகாப்பைப் பெற்றுக்கொடுக்கத் தீட்டப்படும் திட்டங்கள் மூலமே உங்களுடைய எதிர்காலம் நிலையானதாக அமையும் என்பதை கருத்திற்கொள்ளப்பட வேண்டும் என்பது சமூக அக்கறை கொண்ட அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.
அருட்தந்தை மா. சத்திவேல்
நன்றி: மாற்றம்
↧
↧
இந்தியாவின் ஏழை முதலமைச்சர்
முதலமைச்சர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ க்களைக் கூட விட்டு விடு வோம். ஒரு வார்டு கவுன்சிலர் ஒரு பீரி யட் பதவியில் இருந்தால் குத்து மதிப்பாக எத்தனை லட்சங்கள், எத்தனை கோடிகள் சம்பாதிப்பார் என்பதையே நம்மால் கணக்கிட முடியாது. ஆனால் மூன்று பீரியட்கள் திரிபுரா மாநில முதலமைச்சராக இருந்த ஒருவரது மொத்த சொத்தின் மதிப்பு வெறும் 10,800 ரூபாய்தான் என் றால் நம்பமுடிகிறதா? அவருக்குச் சொந் தமாக வீடோ, வாகனமோ, செல்ஃ போனோ கிடையாது என்றால் நம்புவீர் களா? வேறொரு நாட்டில் இருக்கும் யாரோ ஒருவரைப் பற்றிச் சொல்லும் இன்டர்நெட் செய்தி இல்லை இது. நமது பாரத நாட்டின் வட உச்சியில் உட்கார்ந்திருக்கும் திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சர் மாணிக் சர்க்கார்தான் அந்த உத்தமர்.
தற்போது 64 வயதாகும் மாணிக் சர்க்கார் சிபிஎம் கட்சியைச் சேர்ந்த முழு நேர ஊழியர். 1981 இடைத்தேர்தல் மூலம் எம்எல்ஏ ஆனவர். 1998ல் திரிபுராவின் முதல்வரானவர். மூன்று ஐந்தாண்டுகள் முதல்வராய் இருந்த அவர், சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று நான்காம் முறையாக முதல்வராகியுள்ளார். அதிலும் கடந்த தேர்தல்களைக் காட்டிலும் கூடுதல் சீட்டுகள் பெற்றும், அவரது தொகுதியில் கூடுதல் வாக்குகள் பெற்றும் முதல்வர் பதவியைத் தக்க வைத்திருக்கிறார்.சமீபத்தில் நடந்த தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்தபோது தனது சொத்துக் கணக்கை வெளியிட்டார்.
அவரின் மொத்த சொத்தின் மதிப்பே ரூ.10,800-தான். மனைவி, பிள்ளைகள் பேரில் சொத்தை குவித்திருப்பாரோ என்று குறுக்கே சிந்திக்க வேண்டாம். அரசு ஊழியராய் இருந்து ஓய்வுபெற்ற அவரது மனைவி பாஞ்சாலியின் மொத்த சேமிப்பு ரூ. 46,000-தான். இந்தத் தம்பதிக்குக் குழந்தைகள் இல்லை. சொந்த வீடோ, வாகனமோ கிடையாது. சொந்த வேலையாக வெளியே போனால், ஆட்டோ ரிக்ஷா பயணம்தான். சர்க்காரின் அரசு காரில், சுழலும் சிவப்பு விளக்கும் கிடையாது.முதலமைச்சருக்கு என்று ஒரு சம்பளம் உண்டல்லவா? அதையும் கட்சிக்குக் கொடுத்து விடுகிறார் சர்க்கார்.
கட்சி பார்த்து அவருக்கு மாதச் சம்பளம் ரூ.5000 தருகிறது. ‘இந்த பணமும் எனது மனைவியின் பென்சனும் எங்கள் எளிய வாழ்க்கைக்குப் போதுமானது’ என்கிறார் சர்க்கார்.
‘தினமும் காலை, அவர் உடுத்தும் உடைகளை அவரே துவைத்து போட்டு விட்டுத்தான் வெளியே கிளம்புவார்’ என்று தனது கணவர் பற்றி கூறுகிறார் பாஞ்சாலி.‘எனது வெட்டிச் செலவு என்று பார்த்தால் தினசரி ஒரு சிறிய மூக்குப் பொடி மட்டை, ஒரு சிகரெட்தான்’ என்று முன்பு ஒருமுறை வெள்ளந்தியாய் கூறிய சர்க்கார்: தற்போது அந்தப் பழக்கங்களையும் விட்டுவிட்டார்.
2009ல் சர்க்காரின் அம்மா மறைந்த போது, பூர்வீக வீடு ஒன்று அவருக்கு வந்து சேர்ந்தது. வாரிசு இல்லாத தனக்கு அந்த வீடு தேவையில்லை என்று கூறி, தனது தங்கைக்கு அந்த வீட்டைக் கொடுத்து விட்டார் சர்க்கார். சர்க்காரின் அப்பா ஒரு சாதாரண டெய்லர். ஆனாலும் 60களின் இறுதியிலேயே சர்க்காரை மேற்குவங்காள பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படிக்க வைத்தார் அவர். சர்க்காரின் குடும்பத்தினர், உறவினர்கள் எல்லோருமே சராசரி நடுத்தர வர்க்கத்துக்கும் கொஞ்சம் கீழே உள்ள குடும்பங்கள்தான்.
↧
மண்சரிவு அபாயம் - 220 பேர் பாடசாலையில்
சீரற்ற காலநிலை மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக பண்டாரவளை அம்பிட்டிகந்த பெருந்தோட்டத்தில் 67 தொழிலாளர் குடும்பங்களைச் சேர்ந்த 220 பேர் கடந்த சனிக்கிழமை அங்கிருந்து வெளியேற்றப்பட்டு அம்பிட்டிகந்த தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேற்படி தோட்டத்தில் மண் சரிவு அபாயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து,அங்கிருந்து தோட்டத் தொழிலாளர்களை வெளியேறுமாறு பிரதேச செயலாளர் உத்தரவிட்டும் அவ் உத்தரவினை தொழிலாளர்கள் செவிமடுக்கவில்லை. அதையடுத்து பொலிஸாரின் துணையுடன் தோட்டத் தொழிலாளர்கள் உடனடியாக குறிப்பிட்ட இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டு அம்பிட்டிகந்த தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டனர். இவர்களுக்கான அனைத்து வசதிகளையும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சுப் பதுளை மாவட்டப் பணியகம் மேற்கொண்டுள்ளது.
அத்துடன், ஹப்புத்தளைப் பகுதியின் உடவேறியா தோட்டத்தின் 50 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
காலநிலை மாற்றத்தினால் பதுளை மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை முற்று முழுதாக பாதிக்கப்பட்டுள்ளது தொடர்ந்தும் மழை பெய்து கொண்டிருப்பதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.
↧
மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய வீடுகள்
கொத்மலை, இரம்பொடை வெதமுல்ல பிரிவு லிலிஸ்லேண்ட் தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய வீடுகளை கட்டிக்கொடுக்க இன்று மலைநாட்டு புதிய கிராமம் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் அடிக்கல் நாட்டி வைத்தார்.
1960 ஆண்டு காலப்பகுதியில் பெரிய மஸ்கெலியா பகுதியிலிருந்து தற்போது மண்சரிவு ஏற்பட்டிருந்த கயிறுகட்டி தோட்டத்திற்கு குடியிருப்பாளர்களாக வந்திருந்த பரம்பரையை சார்ந்த 7 பேரைக் காவுக்கொண்ட வெதமுல்ல லிலிஸ்லேண்ட் என்று அழைக்கப்படும் கயிறுகட்டி தோட்டத்திற்கு 1948 ஆண்டில் வெள்ளையர் காலப்பகுதியின் பின்னர் நீர் மறைப்புக்காக பெரிய மஸ்கெலியா எடம்ஸ்பீக் தோட்டம் உட்படுத்தப்படுகையில் அங்கிருந்து வெளியேறிய மக்களே அனர்த்தம் ஏற்பட்ட வெதமுல்ல தோட்டத்தில் 1966 ஆண்டு குடியமர்ந்தனர்.
கே.கே.காளியப்பாபிள்ளை தோட்டம் என அழைக்கப்பட்ட வெதமுல்ல கயிறுகட்டி தோட்டத்தில் பதியப்பட்ட பரம்பரையினரே அனர்த்தத்தில் உயிரிழந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது. அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட 19 குடும்பங்களுக்கு வெதமுல்ல பெருந்தோட்ட பகுதியில் குடியிருப்புகள் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.
குறித்த ஒரு வீட்டிற்கு 12 இலட்சம் ரூபா செலவிடப்படுகின்றது. இந்த நிதி உதவியை மலைநாட்டு புதிய கிராமம் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு வழங்குகின்றது. 3 மாதத்திற்குள் இந்த வீடுகள் கட்டி முடிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
↧
காலாவதியான திரிபோஷா
கினிகத்தேனை வைத்தியசாலையில் கர்ப்பிணித் தாய்மாருக்கும் பாலூட்டும் தாய்மாருக்கும் காலாவதியான திரிபோஷா சத்துணவுப் பொதிகள் வழங்கப்படுவதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் குற்றம் சாட்டினார்.
மாகாண சபை அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குற்றம் சாட்டினார்.
இங்கு அவர் மேலும் கூறுகையில், கினிகத்தேனை பகுதிக்கு சென்றிருந்த போது அங்கு சில கர்ப்பிணித் தாய்மாரும் பாலூட்டும் தாய்மாரும் தமக்கு வைத்தியசாலையில் வழங்கப்பட்ட திரிபோஷா சத்துணவுப் பொதிகளுடன் என்னை சந்தித்து கினிகத்தேனை வைத்தியசாலையில் காலாவதியான திரிபோச சத்துணவு வழங்கப்படுவதாக தெரிவித்தனர்.
அத்துடன் என்னிடம் சில காலாவதியான பொதிகளையும் வழங்கி சரியான தீர்வை பெற்றுக்கொடுக்குமாறும் கோரினர். அவர்கள் என்னிடம் கொடுத்த காலாவதியான திரிபோஷா பொதிகளை இந்த சபையின் கவனத்திற்கு கொண்டு வருவதோடு இவற்றை சுகாதார அமைச்சரிடம் ஒப்படைக்கிறேன்.
மத்திய மாகாண சுகாதாரத் துறையில் இதுபோன்ற பல குறைபாடுகள் காணப்படுவதை கடந்த காலங்களிலும் நான் சுட்டிக்காட்டியிருக்கிறேன். அரசாங்க வைத்தியசாலைகளில் காலாவதியான, மக்களின் சுகாதாரத்திற்கு பங்கம் ஏற்படுத்துகின்றவற்றை வழங்குகின்றபோது அதனால் மக்களுக்கு ஏற்படுகின்ற பாதகமான விளைவுகளை சுகாதார அமைச்சு கவனத்தில் கொள்ளவேண்டும். இவ்வாறான நிலை தொடருமானால் சுகாதார துறையில் மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவது மட்டுமல்லாமல், அவர்கள் மனரீதியிலும் உடல் ரீதியிலும் பாதிப்படைவர்.
கினிகத்தேனை வைத்தியசாலையில் வழங்கப்பட்ட காலாவதியான திரிபோஷா பொதிகளை மீளப்பெற்று உரியவர்களுக்கு நிவாரணத்தை வழங்க வேண்டும். கினிகத்தேனை வைத்தியசாலை உட்பட மத்திய மாகாணத்தில் உள்ள ஏனைய வைத்தியசாலைகளிலும் காலாவதியான திரிபோஷா பொதிகள் களஞ்சியப் படுத்தப்பட்டிருந்தால் அவற்றை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறேன்.
இவ்விடயம் தொடர்பில் மத்திய மாகாண சகாதார அமைச்சர் கூறுகையில் இவ்விடயம் தொடர்பில் பூரண விசாரணைக்கு தான் உத்தரவிடுவதாகவும் அடுத்த மாகாண சபை அமர்வில் விசாரணை அறிக்கையை சபைக்கு சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்தார்.
↧
↧
மேலதிக பிரதேச சபைகள்
நுவரெலியா மாவட்டத்தில் மேலதிக பிரதேச சபைகள் உருவாக்கப்பட வேண்டும். நாட்டில் பிற பகுதிகளில் ஆறாயிரம் பேருக்கு ஒரு பிரதேச சபை இருக்கும் போது நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் இரண்டு இலட்சம் பேருக்கு ஒரு பிரதேச சபை இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது மலையக தமிழருக்கு கடந்த இருபத்தியெட்டு வருடங்களாக இழைக்கப்பட்டுள்ள ஜனநாயக மறுப்பு அநீதி. இது எனது அமைச்சு பொறுப்பில் உள்ள தேசிய சகவாழ்வு விடயத்துக்கு முரணானது. எனவே இந்த மிக நீண்ட கால அநீதி இப்போதாவது நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி-ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசன் எம்.பி. உள்ளூராட்சி தேர்தல் எல்லை சீர்திருத்த அமைச்சரவை உபகுழுவில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கூறியதாவது,இந்த முக்கியமான விவகாரம் தொடர்பில் ஏற்கனவே ஒரு கருத்தொருமைப்பாடு இருக்கின்றது. எனவே உள்ளூராட்சி தேர்தல் எல்லை சீர்திருத்த அமைச்சரவை உபகுழு, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களையும், மாவட்ட செயலாளர் மற்றும் அதிகாரிகளையும் அழைத்து கலந்துரையாடி, புதிய பிரதேச சபைகளை நுவரெலியா மாவட்டத்தில் உருவாக்க வேண்டும். இது எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள அடுத்த உள்ளூராட்சி தேர்தல்களுக்கு முன்னர் நடைபெற வேண்டும். எனது இந்த கோரிக்கையை, உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் உள்ளூராட்சி தேர்தல் எல்லை சீர்திருத்த அமைச்சரவை உபகுழு உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்நிலையில் வெகு விரைவில் நமது அமைச்சரவை உபகுழுவை சந்திக்கும் முகமாக, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள், நுவரெலியா மாவட்ட செயலாளர் மற்றும் அதிகாரிகள் ஆகியோருக்கு அழைப்பு அனுப்புவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மிக நீண்ட கால அநீதி நிவர்த்திக்கப்பட வேண்டும் என்பது தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிலைப்பாடாகும். இது தொடர்பான முடிவு கூட்டணியின் கடந்த செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது. எனவே எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள அடுத்த உள்ளூராட்சி தேர்தல்களுக்கு முன்னர் செய்து முடிக்கப்பட வேண்டிய இந்த நடவடிக்கைக்கு சம்பந்தப்பட்ட அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் .
↧
தலவாக்கலை ரத்னீலகல வாசிகசாலை கட்டடத்தை மக்கள் பாவனைக்கு வழங்கவும்
மேல்கொத்மலை மீள்குடியேற்றத்திட்டத்தின் கீழ் தலவாக்கலை ரத்னீலகல குடியிருப்புத்திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வாசிகசாலை கட்டடத்தை மக்கள் பாவனைக்குக் கையளிக்குமாறு மலையக தொழிலாளர் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
மேல் கொத்மலை நீர்மின் திட்டத்தின் கீழ் இடம்பெயர்ந்த ஹொலிரூட், ரத்னீலகல பிரிவை சேர்ந்த தொழிலாளர்களின் நலன் கருதி அமைக்கப்பட்ட புதிய குடியிருப்புத் தொகுதியில் புதிய வாசிகசாலை கட்டடம் ஒன்று அமைக்கப்பட்டது.
குடியிருப்புக்கள் 2009 ஆம் ஆண்டிலேயே மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டு விட்ட போதிலும் வாசிகசாலை கட்டடம் இதுவரை மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவில்லை.
எனவே தாமதமின்றி மேற்படி கட்டடத்தை மக்களின் பாவனை க்காக கையளிக்குமாறு தோட்ட நிர்வாகி மேல் கொத்மலை திட்ட அதிகாரி, மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்கள் மின்சக்தி எரிபொருள் அமைச்சர் ஆகியோருக்கு கடிதங்களை அனுப்பியுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலவாக்கலை மாநில நிர்வாக அதிகாரி எஸ். வரதராஜன் தெரிவித்தார்.
↧
பஸ்சுக்காக காத்திருக்கும் நயாபான மக்கள்
“இன்னும் 8 அடி கம்ராலே தான் இருக்காங்க, அதுக்குள்ள தான் எல்லாருமே வாழ்ந்துட்டு இருக்காங்க. அம்மா, அப்பா, தம்பி, தங்கச்சினு எல்லாரும் அந்த காம்ராகுள்ள தான் படிக்கனும், சாப்டனும் மத்த எல்லா வேலைகளையும் செஞ்சிக்கனும். கொஞ்சம் பேர்க்கு கரன்ட் இருக்கு, கொஞ்சம் பேர்க்கு இல்ல. மழை வந்துச்சினா ஒரு சட்டி பானைய அல்லது வாலிய எடுத்து வச்சிட்டு தான் தூங்குவம். இங்கு எதுவுமே எங்களுக்கு சொந்தம் இல்ல. வீட்டு தின்னைய தான்டினா பிள்ளைங்களுக்கு விளையாட கூட இடம் இல்ல. வீட ஒடச்சி கட்டவோ, வீட்டுக்கு முன்னால இருக்கிற மரத்த வெட்டவோ எதுக்குமே எங்களுக்கு உரிம இல்ல”– என்று தன்னுடைய ஊர் மக்கள் வாழும் வாழ்க்கை குறித்து (மலையக மக்களின் வாழ்க்கை) என்னிடம் மனம் வெறுத்த நிலையில் பேசிக்கொண்டிருந்த தவனேஸ் என்ற இளைஞனின் பேச்சை கேட்டுக் கொண்டே நான் அந்த மண்டபத்தினுள் நுழைந்தேன்.
மலையகம் என்றாலே அழகுக்கு குறைவில்லை. மலைகளும் மலை சார்ந்த தோட்டங்களும் எங்கு சென்றாலும் மீண்டும் மீண்டும் அவ்விடத்திற்கு செல்லத் தோன்றும். ஒவ்வொரு முறையும் நான் வேலைப்பார்க்கும் நிறுவனத்தின் வேலைத்திட்டத்திற்காக கிராமங்களுக்கும் தோட்டங்களுக்கும் போவது வழக்கம். அந்த வகையில் அண்மையில் நயாபான என்ற தோட்டத்திற்கு போக நேர்ந்தது. கம்பளை நகரிலிருந்து 15 கி.மீ தூரத்தில் இருக்கும் தோட்டமே இது.
கம்பளையில் எனது நண்பனை சந்தித்து நான் போகவிருக்கும் தோட்டம் குறித்து தெரிவித்தேன். “அங்கு போக பஸ் இல்லை”– உடனே அவன் வாயில் இருந்த பதில் இது. சரி ஆட்டோவுல போவோம் என்று புறப்பட்டோம். பயணிக்க ஆரம்பித்து ஒரு மணித்தியாலத்தின் பின்னர்தான் அந்தத் தோட்டத்தை நெருங்கினோம்.
ஒருமாதிரியாக தோட்டத்தைச் சென்றடைந்தோம். அங்கு நண்பரின் உதவியுடன் வேலைத்திட்டத்திற்காக கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தேன். விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இளைஞர்கள் வந்திருந்தனர். இடைவிடாமல் பெய்துகொண்டிருக்கும் மழையினால்தான் வரவில்லை போல. மழை கொஞ்சம் ஓய ஒவ்வொருவராக வந்துகொண்டிருந்தனர்.
இளைஞர்கள் அனைவரும் வருகை தந்ததன் பின்னர் என்னுடன் வருகை தந்த சக நண்பர் நாங்கள் வந்ததற்கான காரணத்தை கூறி கலந்துரையாடலை ஆரம்பித்தார். தோட்டத் தலைவரும் தபால் உத்தியோகத்தர் ஒருவரும் அமர்ந்திருந்தார்கள்.
நண்பர் வந்த நோக்கத்தை கூறி சிறிது நேரத்திலேயே உங்களுடைய தோட்டத்தில் காணப்படும் பிரதான பிரச்சினைகள் என்ன என்று கேட்டார். சுமார் 25 இளைஞர்கள் ஒன்றாக அமர்ந்திருந்த அந்தக் கூட்டத்தில் இருந்து மனோஜ் என்ற இளைஞன் எழும்பினான். வயது 18 இருக்கும், இம்முறை தான் உயர்தர பரீட்சை எழுதுகிறானாம். எழுந்த வேகத்திலேயே பேச ஆரம்பித்துவிட்டான், எங்களுடைய தோட்டத்தில் இருக்கும் பிரதான பிரச்சினையே பஸ்தான் என்று ஆரம்பித்தான்.
“எங்கட தோட்டத்துக்கு சிடிபி பஸ் வந்து 20 வருஷங்களுக்கு மேல ஆகுது. எங்களுக்கு தெரிஞ்சி இந்த ஊருக்கு சிடிபி பஸ் வந்ததே இல்ல. அப்படியே பஸ் வந்தாலும் ஒரு நாள், ரெண்டு நாள் மட்டும்தான் வேல செய்யும். இல்லன்னா வார பஸ் வழியில எங்கையாவது ஒடஞ்சிடும். அங்க இருந்து நாங்க வீல் புடிச்சிதான் எங்க ஊருக்கு வரனும். ஒரே ஒரு பிரைவட் பஸ் இங்க வேல செய்து. காலைல 6.30 மணிக்கு ஊர்ல இருந்து இந்த பஸ்ஸ எடுப்பாங்க, அதுவும் சனம் நெரஞ்சா மட்டும் தான். அப்படியே போனாலும் பாரதெக சந்தி வரைக்கும்தான் போகும். அதுக்கு மேல பஸ் இல்ல. நுவரெலியா பக்கம் பஸ் வந்தா, அதுலதான் போகனும். ஒரு நாளைக்கு ரெண்டுதரம் தான் இந்த பஸ்சும் வேல செய்யும். 6.30 மணிக்கு போர இந்த பிரைவட் பஸ்சுலதான் கம்பல கண்டினு எல்லா இடங்களுக்கும் வேலைக்கு போறவங்க போவாங்க. அந்த பஸ்லயே தான் கம்பள, புஸ்ஸல்லாவைல இருக்க தமிழ் ஸ்கூலுக்கு போர பிள்ளைங்களும் போகனும். சில நேரங்கள்ல பஸ் நெரஞ்சிட்டா ஸ்கூல் போர பிள்ளைங்களுக்கு அந்த பஸ்ல போகவே கிடைக்காது, இந்த நிலைதான் இப்பவரைக்கும் எங்களுக்கு இருக்கிற பிரச்சினை”.
மூச்சுவிடாமல் பேசியவன், கொஞ்சம் நிறுத்தி மீண்டும் ஆரம்பித்தான். பஸ் பிரச்சினையால் நிறைய பாதிக்கப்பட்டவன் போல.
“கம்பல டவுன்ல இருந்து 15 கி.மீ தூரத்துலதான் நாங்க இருக்கம். ஸ்கூல் பிள்ளைங்க பஸ்ஸ விட்டுடா வீல்ல தான் போகனும். அப்டியே போரதுனாலும் 300 ரூபா குடுத்து தான் போகனும். எந்தனாலும் வீல்ல போர அளவுக்கு எங்கட அம்மா அப்பாவுக்கு வருமானம் இல்ல. இதனால ஊர்ல இருக்க பெரியவங்க டிப்போல போய்ட்டு பஸ் கேட்டாங்க, பலமுறை கேட்டும் கூட, பஸ் இல்ல அல்லது பஸ் டிரைவர் இல்ல எண்டு சாக்கு போக்கு சொல்லி அனுப்பிடுராங்க. தொடர்ந்து இதுதான் நடக்குது, நாங்களும் எவ்வளவோ பேசி பார்த்துட்டம், ஒரு முடிவும் இல்ல. இப்போ மாத்திரம் இல்ல, பல வருடமா தொடர்ந்து இருக்கிற பிரச்சின இது தான்”என்று முடித்தார் அந்த இளைஞன்.
குளிருக்கு பஞ்சம் இல்லாத தோட்டம் போல. மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. கண் முன்னே இருக்கும் இளைஞர்களை தெளிவாக பார்க்க முடியவில்லை. அந்த அளவுக்கு பணி மூட்டம். மாலை 3.00 மணியே ஆகினாலும் கூட மாலை 6.00 மணியை போல இருள் சூழ்ந்து கொண்டது.
இவ்வாறு மனோஜ் பேசி முடிக்கும் போதே தபால் உத்தியோகத்தர் சுமார் 28 வயது மதிக்க தக்க நபர் இன்னும் ஒரு முக்கியமான பிர்ச்சினை இருக்கு என்று பேச ஆரம்பித்தார்.
“இந்த தோட்டத்துல இருக்க பிரதான பிரச்சினை வேலை இல்லாத பிரச்சினைதான். இங்க இருக்குர இளைஞர்களோட அம்மா, அப்பா எல்லாருமே தோட்டத்துல தான் வேலை செய்றாங்க தொடர்ந்து 22 நாள் வேலை செஞ்ஞா மாத்திரம் தான் 600 ரூபா சம்பளம் கொடுப்பாங்க. 21 நாள் வேலை செஞ்ஞாலும் கூட 450 ரூபா தான் கிடைக்கும். அதுவும் தோட்டத்த பொருத்தவரைல ஒவ்வொரு மாதமும் 22 நாள் வேலை இருக்கும் என்டு சொல்லவே முடியாது”.
“கடந்த மாதம்தான் நாங்க ரொம்பவே கஷ்டத்த அனுபவிச்ச மாசம். இந்த அரசியல் வாதிங்க பேச்ச கேட்டு இங்க உள்ளவங்க எல்லாருமே மெதுவா வேலைய செஞ்சிட்டு போனாங்க. கட்டாயமா சம்பளத்த கூட்டுவாங்க என்ற நம்பிக்கைல. ஆனா, சம்பளம் கூட்டப்படவும் இல்ல, மெதுவா வேலை செஞ்சவங்க யாருக்குமே கடைசி வரைக்கும் அந்த மாதத்துக்கான சம்பளமும் கிடைக்கவே இல்ல”.
“எங்கட தோட்டத்துல இருந்து வெளியில டவுனுக்கு வேலைக்கு போரதுனாலும் பஸ் பிரச்சினைதான். ஒரு நாள் போனா ஒரு நாள் போக கிடைக்காது, பஸ் இருக்காது. தொழில், வீடு, கல்வி என எல்லா வகையிலும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்ற தோட்டமே இந்த நயாபான தோட்டம்”என்று கூறி முடித்தார் தபால் உத்தியோகத்தர்.
இவ்வாறு பிரச்சினைகளையும் வினவிக் கொண்டு எங்களுடைய வேலைத்திட்டத்தினையும் தெளிவுபடுத்திக் கொண்டு எவ்வித எதிர்பார்ப்பையும் அவர்களுக்கு வழங்காமல் நாங்கள் அவ்விடத்தில் இருந்து விடைபெற்று, அருகில் இருக்கும் இரு தோடங்களுக்கும் சென்றுவிட்டு மாலை 4.00 மணியளவில் நயாபான தோட்டம் ஊடாகவே சென்றோம்.
அப்போது நயாபான தோட்டத்திற்குச் செல்லும் பஸ்ஸைக் கண்டேன். அசைந்து அசைந்து மனித வேகத்தில் நடந்து வந்துகொண்டிருந்தது. அந்த பஸ்ஸில் அதிகபட்சமாக 25 அல்லது 30 பேர் மாத்திரமே செல்ல முடியும். ஆனால், 60இற்கும் அதிகமானோர் அடைப்பட்டு, தொங்கிக்கொண்டு செல்வதைக் கண்டேன். அளவுக்கு அதிகமான சுமையுடன் செல்லும் அந்த பஸ்வண்டியில் மிகவும் சிரமத்துக்கு மத்தியிலேயே எங்களை தாண்டி சென்றது. இதுதான் இந்த நயாபான தோட்ட மக்களின் பிரதான பிரச்சினை.
மலையக தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஏராளம். நயாபான மக்கள் விதிவிலக்கல்ல. ‘மாற்றம்’ அரசில் அங்கம் வகித்துள்ள மலையக அரசியல்வாதிகள் இவற்றையும் தேடிப்பார்ப்பார்களா?
எம். பிரதீபன்
↧
தோட்ட அதிகாரியின் தாக்குதலால் தாய், மகன் வைத்தியசாலையில்
வலப்பனை, மாவுவா தோட்டத்தில் தோட்ட அதிகாரியின் தாக்குதல் காரணமாக அதே தோட்டத்தை சேர்ந்த திலகேஷ்வரி (வயது 40), செலக்ஷன் (வயது 16) ஆகிய இருவரும் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது வலப்பனை, மாவுவா தோட்டத்தில் தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி ஓய்வூதிய கடிதங்களைப் வழங்கும் நடவடிக்கையில் தோட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகின்றது.
மத்துரட்ட பிளான்டேசன் கம்பனியின் கீழ் இயங்கும் இத்தோட்டத்தில் மொத்தமாக 385 தொழிலாளர்கள் தொழில்புரிகின்றனர். ஒரு தொழிலாளிக்கு தலா 1,000 தேயிலை மரங்கள் வீதம் பிரித்து தருவதாகக் கூறி, அதற்கு தொழிலாளர்கள் ஓய்வூதியம் பெற்றிருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து 272 தொழிலாளர்களிடமிருந்து தோட்ட நிர்வாகம் கடிதங்களை பெற்றுக்கொண்டுள்;ளது. இதில் 150 தொழிலாளர்களுக்கு 14 நாட்களுக்கான காசோலைகளும் வந்து விட்டன. இவர்களில் சிலர் இதற்கு உடன்படாததால் தோட்ட நிர்வாகம் அவர்களை பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரியவருகிறது.
இவ்வாறிருக்க தனி வீடொன்றில் வசித்து வரும் திலகேஷ்வரி என்ற பெண்ணின் வீட்டுக்கு நேற்று சென்ற தோட்ட அதிகாரி, கணக்கப்பிள்ளை மற்றும் தோட்ட குமாஸ்தாக்கள் தேயிலைச் செடிகளை பிடிங்கியதாக கூறி இப்பெண்ணிடம் முரண்பட்டுள்ளனர். இதன்போது தோட்ட அதிகாரி அப்பெண்ணை தாக்கியுள்ளார். தனது தாயை தோட்ட அதிகாரி தாக்குவதை கண்ட அப்பெண்ணின் மகன் அதனை தடுக்க முற்பட்டபோது அச்சிறுவனையும் தோட்ட அதிகாரி மற்றும் கணக்கப்பிள்ளை ஆகியோர் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இவர்களின் தாக்குதலில் காயமடைந்த இருவரும் உடனடியாக வலப்பனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய கணக்கபிள்ளையை பொலிஸார் கைதுசெய்த போதும் ஒரு சில மணித்தியாலங்களில் விடுவித்துள்ளதாகவும் இது தொடர்பிலான விசாரணைகள் மேலிடத்துக்கு மாற்றியுள்ளதாகவும் தெரியவருகிறது. இதேவேளை, தோட்ட அதிகாரியை தாக்கியதாக கூறி தொழிலாளி ஒருவரை வலப்பனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இச்சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தோட்ட மக்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.மாவுவா தோட்டத்தில் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றபோதும் தொழிலாளர்களின் சந்தாவை பெறும் எந்த தொழிற்சங்கங்களும் இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இத்தோட்டத்தை கைவிட்டதை போன்று தொழிற்சங்கங்களும் நடந்துகொள்வதாக தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
↧
↧
உள்ளூராட்சித் தேர்தல்களின் போது தமிழ் பிரதிநிதித்துவம் குறைவடையும் அபாயம்
உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில், தற்போதுள்ள மிகச் சொற்பமான தமிழ் பிரதிநிதித்துவங்கள் கூட கைநழுவிப் போகக்கூடிய அபாயம் இருப்பதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் எம்.சிவஞானம் தெரிவித்தார். ஞாயிறன்று மாத்தளை இ.தொ.கா. அலுவலகத்தில் நடைபெற்ற தோட்டக் கமிட்டித் தலைவர்களின் கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மாவட்டப் பிரதிநிதி எஸ்.கமலநாதனின் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் அவர் மேலும் பேசிய போது.
கடந்த காலங்களில் பெரும்பான்மை இன அரசியல் கட்சிகள் தான் பலவகையான திருகுதாளங்களைச் செய்து நமது மக்களின் வாக்குகளைச் சிதறடித்து அவர்கள் நன்மையடைந்து வந்தனர். ஆனால் எதிர்காலம் அப்படி இருக்கப் போவதில்லை.
நம்மவர்களே தமது பலத்தைக் காட்டுவதாக முயற்சிகளில் இறங்கி அதன் மூலம் நமது மக்கள் மத்தியில் நிலவும் ஒற்றுமையை சீர்குலைத்து அவர்களின் வாக்குகளையும் சிதறடிக்கும் கைங்கரியத்தில் இறங்கும் அபாயம் இருக்கிறது. ஆகவே பெருந்தோட்டங்களிலுள்ள நமது மக்கள் மிகவும் விழிப்பாக இருந்து பிரிவினைக்கு வழிவகுக்கும் சக்திகளை ஓரங்கட்ட முன்வர வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு ஏழு பர்ச்சஸ் காணி வழங்கும் திட்டத்தை நாம் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள போவதில்லை. தோட்டங்கள் திட்டமிட்டு காடுகளாக மாற்றப்பட்டு வருகின்றன. அப்படி நிர்வாகத்தால் கைவிடப்பட்டுள்ள காணிகளை ஒரு குடும்பத்துக்கு தலா இரண்டு ஏக்கர் வீதம் தொழிலாளர்களுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதையே நாங்கள் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம். ஆகவே நமது கோரிக்கை தொடரவே செய்யும் என்று குறிப்பிட்டார்.
↧
அபாய அறிவித்தல்
பதுளை மாவட்டத்தில் மண் சரிவு, மலை சரிதல் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் தென்படுவதாகவும். இதனால் அம் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 50,000 மக்களை அப்பிரதேசத்திலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
இதேவேளை பதுளை மாவட்டத்தில் கடந்த புதன் கிழமை மாலை மிகக் குறுகிய நேரத்தில் 80- 100 மி.லீ வரை மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டம் மட்டுமன்றி நுவரெலியா, கேகாலை, களுத்துறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கும் மேற்படி அபாய அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் இயக்குநர் பிரதீபு பொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.
காற்றுடன் கூடிய மலை நாட்டின் பல பாகங்களிலும் பெய்யக்கூடுமென வாநிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது.
தொடர்ச்சியான மழையினால் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு திறக்கப்பட்டுள்ளது. அப்பிரதேசத்தை அண்டிய மக்களை அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் பணித்துள்ளனர்.
தொடர்ந்து மழை பெய்யுமானால் நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்படும் என தெரிவிக்கின்றனர். இதேவேளை நுவரெலியா, ஹட்டன், கினிகத்தேன உட்பட மலையகத்தின் பல பகுதிகளில் அதிக பனி மூட்டம் காணப்படுவதால் வாகனங்களை செலுத்வோர் மிக அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இறம்பொடை, வெதமுல்ல கயிறுக்கட்டி தோட்டத்திலுள்ள 2ஆம் லயன் குடியிருப்பிலிருந்து 7குடும்பங்களைச் சேர்ந்த 25 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேற்படி லயன் குடியிருப்புத் தொகுதியின் பாதுகாப்பு கருதி அமைக்கப்பட்டிருந்த மதில் இடிந்து விழும் அபாயமுள்ளதாக தெரிவித்தே குறித்த 7குடும்பங்களும் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
↧
அரிய வகை உயிரினங்கள் அழியும் அபாயம்
இலங்கையில் மட்டுமே உள்ளதாக கூறப்படும் அரிய வகை உயிரினங்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளதாக சுற்றுச் சூழலியலாளரான பிரதீப் சமரவிக்கிரம தெரிவித்தார்.
"கொள கொடையா"என்றழைக்கப்படும் மீனினம், 4 அரியவகை பச்சோந்திகள், 10 வகையான வண்ணத்துப்பூச்சிகள், 11 வகையான முலையூட்டிகளே இவ்வாறு அழியும் நிலையை எதிர்கொண்டுள்ளன.
இவை, மகாவலி கங்கையை சூழ அமைந்துள்ள சிறிய சிறிய தீவுகளில் வாழ்ந்து வருவதாகவும் இக்கங்கையில் கொட்டப்படும் கழிவுகள் மற்றும் இராசாயன பதார்த்தங்கள் காரணமாக அவை அழியும் நிலையை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
↧
தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும்
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகி ஆறு மாதங்கள் ஆகியும் புதிய ஒப்பந்தம் செய்து கொள்ளப்படவில்லை. அதனால், தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வும் கிடைக்கவில்லை.
மேலும் தீபாவளிப் பண்டிகை காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. எனவே, தொழிலாளர்களின் சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணி உப தலைவர் செல்லையா சிவசுந்தரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் மேலும் தமது அறிக்கையில், தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் வேளையில் பருப்பு, சீனி முதலான அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இதனால் குறைந்த வருமானம் பெறுகின்ற தோட்டத் தொழிலாளர்கள் பெரும் பொருளாதாரச் சுமைக்கு முகங் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கடந்த வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கும், தனியார் துறை ஊழியர்களுக்கும் அறிவிக்கப்பட்ட சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. எனினும், இந்த சம்பள அதிகரிப்பு தோட்டத் தொழிலாளர்களுக்குக் கிடைக்கவில்லை. மேலும், அவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து கிடைக்க வேண்டிய சம்பள உயர்வும் கிடைக்கவில்லை.
அதற்காக தொழிற்சங்கங்களுக்கும் கம்பனிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளன.இந்நிலையில் அடுத்த மாதம் 10 ஆம் திகதி தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் தோட்டத் தொழிலாளர்கள் புத்தாடை கொள்வனவு செய்யவும், பண்டிகைக்குத் தேவையான பலகாரங்களைத் தயாரிக்கவும் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றார்கள்.பண்டிகை காலத்துக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தினதும் விலைவாசி திடீரென அதிகரித்துள்ளது. இதனால் ஏற்கனவே, பொருளாதாரச் சுமையில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்கள் மேலும் சுமைக்கு ஆளாகி இருக்கின்றார்கள். கம்பனிகளுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இடம்பெறும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து இழுபறி நிலையில் காணப்படுகின்றது. எனவே, கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும், பாராளுமன்றத் தேர்தலிலும் இன்றைய அரசாங்கம் ஆட்சியமைக்க பெருமளவில் நம்பிக்கையுடன் வாக்களித்த
மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் அரசாங்கம் தலையிட்டு நியாயமான சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் செல்லையா
சிவசுந்தரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
↧
↧
வறுமையை ஒழிக்க சிக்கனமும் சேமிப்பும் அவசியம்
இன்று 17.10.2015 வறுமை ஒழிப்பு தினம்
ஒரு நாட்டின் பொருளாதார உயர்வானது அந்த நாடுகளில் வாழ்கின்ற குடிமக்கள் யாவரும் போதிய அளவு அத்தியாவசிய அடிப்படை தேவைகளான உணவு, உடை, உறையுள் சுத்தமான குடிநீர் போதியளவு கல்வி அறிவு வீதி கட்டமைப்பு வசதி, நவீன தொலைத்தொடர்பு வசதி ஆகியவைகளுடன் தனிமனித சுதந்திரம் போன்றவைகளில் தன்னிறைவு உள்ளவர்களாக இருத்தல் வேண்டுமென வலியுறுத்தப்படுகின்றது.
1987 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்த ஜோசப் ரெசின்சி உலகிலிருந்து வறுமை ஒழிக்கப்பட வேண்டுமென தனது வாலிப வயதிலிருந்து குரல் கொடுத்து வந்ததுடன் அதற்கான சமூகம் தழுவிய வேலைத்திட்டத்திலும் ஈடுபட்டார். இதன் பலனாக 1992 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை உலக வறுமை ஒழிப்பு தினமாக அக்டோபர் 17 ஆம் திகதியை பிரகடனப்படுத்தி உள்ளது. ஜோசப் ரெசின்சி என்பவரே உலகில் முதன் முதலில் வறுமை ஒழிக்கப்படல் வேண்டுமென போராடி அதை உலகளவில் சமூகமயக்கியவர் எனலாம்.
இதன் பின்னர் ஐக்கிய நாடுகள் சபை தனது அங்கத்துவ நாடுகளை ஒன்றிணைந்து உலகிலிருந்து வறுமையை ஒழிப்பதற்கும் தனிமனித பொருளாதார உயர்விற்குமான திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்த ஆரம்பித்தார்.
உலகில் வறுமையான நிலையின் மனித இனம் வாட்டம் பெற போர், இயற்கை சீற்றங்கள், காலநிலையில் சடுதியான ஏற்றத்தாழ்வுகள் கல்வி அறிவின்மை, அடிமைத்தனம் போன்றவைகளுடன் அரசியல் ரீதியான தாக்கங்களும் காரணமாக இருக்கின்றன.
வறுமை அல்லது பட்டினி என்பது ஒரு தனிமனிதன் ஒரு நாளைக்கு 1800 கலோரி உணவுக்கு குறைவாக உட்கொள்கின்றான் என்பதே அர்த்தமாகும். போஷாக்கற்ற அல்லது சீரான நேரம் தவறிய உணவு முறைகளால் பாரிய சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகின்றது. இன்று ஆபிரிக்காவில் மக்கள் பட்டினிச்சாவின் விளிம்பில் நிற்கின்றார்கள். அங்கு மனித இன அழிவு தொடர்ந்த வண்ணம் உள்ளது.
இன்று குறைந்த வருமானம் பெறும் சமூகத்தினரிடையே வறுமையைக் குறைப்பது சவால்மிக்க ஒரு பணியாகும். இது அரசாங்கம் மட்டுமின்றி உலகில் உள்ள முழுமொத்தச் சமூகமும் எதிர்நோக்க வேண்டிய சவாலாகும். உலகிலிருந்து வறுமையை நீக்கவென உலக வங்கி உட்பட பல நாட்டு நிதி நிறுவனங்கள் பல ஆக்கபூர்வமான பங்களிப்புக்களை மிகத் தீவிரமாக செய்து கொண்டுதான் உள்ளது. ஆனால் வறுமை முற்றாக அல்லது பாதியளவு குறைக்கப்பட்டிருக்கின்றதா என்பது ஆய்வு செய்ய வேண்டியது.
எமது இலங்கைத் திருநாட்டைப் பொறுத்தவரை தனிமனித வருமானம் உயர்ந்துள்ளதாக மத்திய வங்கி அதிகாரிகள் அவ்வப்போது கூறிவந்துள்ளனர்.
இலங்கை மத்திய வங்கியின் வெளியிட்ட சிறு குழுக்கள் முறை நூலில் எமது நாட்டின் வறிய மக்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதாகவும் தற்சமயம் அத்தொகை நாட்டின் மொத்த சனத்தொகையில் 15 வீதத்தை விடக் குறைவாக காணப்படுகின்றது என மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அஜித் கப்ரால் எழுதியுள்ளார். இதிலிருந்தும் தற்கால நல்லாட்சி அரசின் வேலைத்திட்டங்களின் மூலமாகவும் வறுமை ஒழிப்பு நடவடிக்கை மிகச் சீராக தூரநோக்கான செயல்திட்டத்துடன் முன்னெடுத்து வருகின்றது என சுட்டிக்காட்ட முடியும்.
கீழைத்தேய நாடுகளை ஆங்கிலேயர் ஆட்சி செய்த நேரத்தில் மக்களின் உணவிற்குத் தேவையான பொருட்களை பகிர்ந்தளித்தார்களே தவிர தூரநோக்கான பொருளாதார அபிவிருத்தியை மக்களுக்காகச் செய்யவில்லை. தங்களது நாட்டின் பொருளாதாரம் வெள்ளைக்கார மக்களின் நல்வாழ்விற்கான ஏற்பாடுகளை வசதிவாய்ப்புக்களுக்கு ஏற்புடைய தொழில் துறைகளையே ஏற்படுத்தி இருந்தனர்.
இதனால் தான் வறிய நாடுகள் செல்வந்த நாடுகள் என்ற இருபெரும் பிரிவுகள் தோற்றம் கண்டது. மக்களை வறுமை நிலையில் வைத்துக் கொள்ளவே விரும்பி அதற்கு செயல்வடிவமும் கொடுத்தார்கள்.
இலங்கை சுதந்திரம் அடைந்தவுடன் இந்த மானிய உணவு விநியோகம் தொடர்ந்து வந்த அரசுகளால் முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கின்றது. அன்று மக்களுக்கு இலவசமாக ஒரு சேர் அரிசி இரண்டு சேர் (படி) அரிசி என்பன பெரும் அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. அரசியலை புரட்டிப்போடும் அளவிற்கு மானிய விநியோகம் செல்வாக்கு பெற்றிருக்கின்றது. இன்றும் இதை சமுர்த்தி கொடுப்பனவு ஊடாக மக்கள் பெற்று வருகின்றார்கள்.
எந்தவொரு மானிய இலவச விநியோகத்திற்கும் பணம் வழங்கப்பட முடியாது என உலக வங்கி சிவப்புக் கொடியை காட்டுகின்றது. கடன் வாங்கும் போது கைக்கொள்ளப்படும் இறுக்கமான நடைமுறை அரசியல் நீரோட்டத்தில் மாற்றம் காணுகின்றது.
வறுமை ஒழிக்கப்படுவதற்கு சிக்கனம் சேமிப்பும் கண்டிப்பாக தனிமனிதரிடத்திலும் நாட்டிலும் இருத்தல் அவசியம். பிரித்தானியரின் குடியேற்றப் பொருளாதார அபிவிருத்திக்கு முதலீட்டாக்கம் முக்கியம் என கண்டறியப்பட்டுள்ளது.
19 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் சேமிப்பு வங்கியினை நிறுவிய முன்னோடிகள் என்ற பெருமை ஆளுநர் சேர். நாபர் வில்மட் ஹோட்டின் மற்றும் சேர். பொன்னம்பலம் இராமநாதன் ஆகியோர்களையே சாரும்.
இலங்கையில் சேமிப்பு வங்கியானது 6.8.1832 ல் தாபிக்கப்பட்டது. அன்று சேமிப்பு கணக்குகள் பணத்திற்கு பதிலாக தங்கப் பவுண்கள் கொண்டு திறக்கப்பட்டதாக அறிய முடிகின்றது.
எனவே ஒரு நாட்டிலிருந்தும் உலகிலிருந்தும் வறுமை ஒழிக்கப்பட வேண்டுமாக இருந்தால் நாட்டில் உற்பத்தி தொழில் துறை சார்ந்த திட்டங்கள் உருவாக்கத்துடன் நல்ல தூரநோக்கான அரசுகள் நாட்டில் இருத்தல் அவசியம். லஞ்சம் ஊழல் அற்ற ஆட்சியினால் மிக விரைவாக வறுமையிலிருந்து மக்களை மீட்டெடுக்க முடியும்.
வறுமை என்பது என்றைக்கும் நிலையானதல்ல. வறுமையானது சிலரது வாழ்நாட்களில் கடத்த வேண்டியிருக்கும் ஒரு தற்காலிக வாய்ப்பு மட்டுமே. சிலர் இவ்வாய்ப்பை துரிதமாக கடந்து முன்னோக்கி செல்வதோடு மற்றும் சிலர் சில நாட்கள் கடந்து தாமதித்தேனும் பொருளாதார மீட்சிபெறுகின்றான். உலக மக்கள் சமூகம் வறுமையை எதிர்த்து நின்று உழைத்தால் இதை விரட்டி அடிக்கலாம் என்று கூறமுடியும்.
↧
குளவி தாக்குதலில் 51 பேர் பாதிப்பு; 11 பேர் வைத்தியசாலையில்
புசல்லாவ ஸ்டெலன்பேர்க் தோட்டம், வீடன் பிரிவில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண்களை குளவி தாக்கியதில் 51 பேர் பாதிப்புக்குள்ளாகினர்.
இவர்களில் பெண்கள் 50 பேரும், தோட்டக் கணக்குப்பிள்ளை ஒருவரும் அடங்குவர்.
இவர்களில் 11 பேர் பாரிய பாதிப்புக்குள்ளாகி 7 பேர் புஸ்ஸல்லாவ வகுகப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
3 பேர் கம்பளை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் நேற்று (16-10-2015) பகல் வேலையில் இடம் பெற்றுள்ளது.
குறித்த பெண்கள் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பிரதேசத்தில் கழுகு ஒன்று பாம்பு ஒன்றை இறைக்காக பெற்றுக் கொள்ள முயற்சித்த போது கழுகின் சிறகு அருகில் இருந்த குளவி கூட்டில் பட்டதால் குளவுக் கூடு கலைந்ததாக நேரில் கண்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இவர்களில் பெண்கள் 50 பேரும், தோட்டக் கணக்குப்பிள்ளை ஒருவரும் அடங்குவர்.
இவர்களில் 11 பேர் பாரிய பாதிப்புக்குள்ளாகி 7 பேர் புஸ்ஸல்லாவ வகுகப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
3 பேர் கம்பளை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் நேற்று (16-10-2015) பகல் வேலையில் இடம் பெற்றுள்ளது.
குறித்த பெண்கள் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பிரதேசத்தில் கழுகு ஒன்று பாம்பு ஒன்றை இறைக்காக பெற்றுக் கொள்ள முயற்சித்த போது கழுகின் சிறகு அருகில் இருந்த குளவி கூட்டில் பட்டதால் குளவுக் கூடு கலைந்ததாக நேரில் கண்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
↧
மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டில் பெய்துவரும் பலத்த மழையின் காரணமாக 7 மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை, நுவரெலியா, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்ட்ட ஆராய்ச்சி நிறுவகத்தின் மண்சரிவு ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ். பண்டார குறிப்பிடுகின்றார்.
மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்றிரவு 8 மணிவரை அமுலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தின் மஹியங்கனை தவிர சகல பிரதேச செயலகப் பிரிவுகளிலும் பரவலாக மழை பெய்துவருகின்றமையால் மண்மேடுகள் மற்றும் உயர் நிலப் பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும் என்றும் மண்சரிவு ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் கேட்டுள்ளார்.
-News1st-
↧
More Pages to Explore .....